கந்தசஷ்டி: திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த சுப்ரமணியர் - லட்சக்கணக்கோனோர் தரிசனம்
திருசெந்தூர்: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை தொடங்கி ஆறு நாட்கள் போர் புரிந்து சஷ்டி திதியன்று சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்களை வதம் செய்து ,வெற்றி கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த 12ம் தேதி வியாழக்கிழமையன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவின் 5ம் நாளான திங்கட்கிழமை மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடைபெற்ற உடன் யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. அதன்பின் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து தங்கசப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட சண்முகவிலாச மண்டபத்தை வந்தமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் வைத்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அப்போது சுவாமியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தொடர்ந்து சுவாமி தங்க ரதத்தில் எழுந்து கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மூலவர் சுப்பிரமணியர் வைரக்கீரிடம், தங்க கவசம் அணிந்து, வேலும், கொலுசாயுதமும் தாங்கி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து உச்சிகால தீபாராதனை நடைபெற்றது.
தங்க மயில்வாகனத்தில் இறைவன்
தங்கமயில் வாகனத்தில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்த்திற்கு சுவாமி எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைக்குப் பின், தங்க மயில் வாகனத்தில் புறப்பட்டு, மாலை 4.50 மணிக்கு சூரனை வதம் செய்ய கடற்கரைக்கு எழுந்தருளினார்.
கடற்கரையில் சூரசம்ஹாரம்
சூரசம்ஹாரம் நிகழ்வினைக் கான கடற்கரையில் குவிந்திருந்த கூட்டம் தலையா? கடல் அலையா? என்ற வியப்பை ஏற்படுத்தியது. மாலை 5.25 மணிக்கு முதலில் யானை முக சூரனையும், பின்னர் சிங்க முக சூரனையும், இறுதியில் சூரபத்மனை வதம் செய்து தன்னுடன் சேவற்கொடியாகவும், மயிலாகவும் ஆட்கொண்டார்.
திருக்கல்யாணம்
7ம் நாள் திருவிழாவான 18ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு, 3.30 மணிக்கு விஸ்வ ரூபம், அதிகாலை 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மற்ற கால பூஜைகளும் நடைபெறும். மாலை 6.30 மணியளவில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்று விழாவும், இரவு திருக்கல்யாணம் வைபவமும் நடைபெறும்.
பழனியில் கந்தசஷ்டி விழா
பழநி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா நவம்பர் 12ம்தேதி முதல்18ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு மலைக்கோயில் நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், அதிகாலை 4.30 மணிக்கு விளா பூஜை, படையல் நைவேத்தியம் நடைபெற்றது.
சூரசம்ஹாரம்
பகல் 2.30 மணிக்கு சின்னக்குமாரசுவாமி மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கியவுடன் சன்னதி நடைசாத்தப்பட்டது. திருஆவினன்குடியில் பராசக்திவேலுக்கு பூஜை செய்யப்பட்டு மாலை 6 மணிக்குமேல் முருகப்பெருமான் நான்கு கிரிவீதிகளிலும் தாரகாசூரன், பானு கோபன்சூரன், சிங்கமுகாசூரன், சூரபத்மன் ஆகிய அசுரர்களை வதம் செய்தார் முருகப்பெருமான்.
முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம்
நவம்பர் 18ம்தேதி மலைக்கோயிலில் காலை 10.30 மணிக்குமேல் 12 மணிக்குள் சண்முகர், வள்ளி தேவசேனாவிற்கும், மாலை 6 மணிக்குமேல் இரவு 7.30 மணிக்குள் பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி,தெய்வானைக்கும் திருக்கல்யாணமும், சுவாமி தங்க குதிரை வாகனத்தில் திருவுலா நடக்கிறது.