அதிமுக எம்பி ராஜினாமா செய்ததை போல் கனிமொழியும் ராஜினாமா செய்யவேண்டும்.. தமிழிசை தடாலடி
அதிமுக எம்பி ராஜினாமா செய்ததை போல் திமுக எம்பியான கனிமொழியும் ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருவண்ணாமலை: அதிமுக எம்பி ராஜினாமா செய்ததை போல் திமுக எம்பியான கனிமொழியும் ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் அதிமுக ராஜ்யசபா எம்பியான முத்துக்கருப்பன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தமிழிசை கருத்து
ஆனால் அவரது ராஜினாமா கடிதத்தை ராஜ்யசபா தலைவரான வெங்கையா நாயுடு ஏற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
திமுகதான் காரணம்
அப்போது எதிர்மறை அரசியல் செய்வதை ஸ்டாலின் கைவிட வேண்டும் என தமிழிசை வலியுறுத்தினார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைவிற்கு திமுக தான் காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
திமுகவினர் எதிர்மறை அரசியல்
காலையில் கைதுசெய்து மாலையில் விடுதலை செய்வதால் தான், திமுகவினர் தினமும் போராடுகின்றனர் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டினார். காவிரி விவகாரத்தில் திமுகவினர் எதிர்மறையான அரசியலில் ஈடுபடுகின்றனர் தமிழிசை தெரிவித்தார்.
கனிமொழி ராஜினாமா
10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திமுக காவிரி பிரச்சனையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் அதிமுக எம்பி முத்துக்கருப்பனைப் போல் திமுக எம்பியான கனிமொழியும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கறுப்புக்கொடி - கைது
முன்னதாக மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாக திருவண்ணாமலை ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவினர் தமிழிசைக்கு கறுப்புக்கொடி காட்டினர். கறுப்புக்கொடி காட்டியவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.