ரேசனில் அரிசி, பருப்பு தட்டுப்பாடு... போராட்டம் நடத்திய கனிமொழி எம்.பி கைது
ரேசன் கடைகளில் அரிசி, பருப்பு தட்டுப்பாடு நிலவுவதாக திமுக எம்.பி கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய கனிமொழி கைது செய்யப்பட்டார்.
சென்னை: மக்களுக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள ரேசன் பொருட்களுக்க தட்டுப்பாடு நிலவுவதாக திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். டாஸ்மாக் கடைகளில் மட்டும் மதுபாட்டில்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதாகவும் கூறியுள்ளார். ரேசன் கடை முன்பு போராட்டம் நடத்திய கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அளிப்பதில்லை என்பது திமுகவினர் குற்றச்சாட்டு. பல தொகுதிகளில் திமுக எம்எல்ஏக்கள் ஆய்வு நடத்தி ஸ்டாலினுக்கு அறிக்கை அளித்தனர்.
இதனையடுத்து மாநிலம் முழுவதும் இன்று ரேசன்கடைகளை திமுகவினர் முற்றுகையிட்டனர். சென்னை ராயப்பேட்டையில் கனிமொழி எம்பி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. கடையை முற்றுகையிட முயன்ற கனிமொழி உள்ளிட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
கடும் தட்டுப்பாடு
போராட்டத்தின் போது பேசிய கனிமொழி, மாநிலம் முழுவதும் மக்களுக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள ரேசன் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக குற்றம் சாட்டினார். டாஸ்மாக் கடைகளில் மட்டும் பொருட்கள் தடையின்றி கிடைப்பதாகவும் அவர் கூறினார்.
அரிசியில் தரமில்லை
விலையில்லா அரிசி கொடுத்தாலும் அது தரமானதாக இருப்பதில்லை என்று கூறிய கனிமொழி, மக்களுக்கு பொருட்கள் கிடைக்கிறதா? என்பதைப்பற்றி அமைச்சர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை என்றார்.
எம்எல்ஏக்கள் நிலை
அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்களின் நிலையோ பரிதாபமாக உள்ளது. தங்களின் பதவியை பாதுகாத்துக்கொள்ளவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது என்று கூறிய கனிமொழி, மக்களைப் பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை என்றார்.
தண்ணீர் தட்டுப்பாடு
மாநிலம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், லாரி தண்ணீர் கூட பெரும் போராட்டத்திற்கு பிறகே கிடைப்பதாகவும் கனிமொழி குற்றம் சாட்டினார். பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்காகவே இந்த போராட்டத்தை எதிர்கட்சியான திமுக நடத்துவதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி உள்ளிட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் போராட்டம்
தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதைக் கண்டித்து திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்திய திமுகவினரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.