தி.மு.க. பொதுக்குழு நாளை கூடுகிறது.. கனிமொழிக்கு கிடைக்கப் போவது மகளிரணியா? மாணவர் அணியா?
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தி.மு.க. பொதுக்குழு நாளை கூடுகிறது. இந்தப் பொதுக்குழுவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மகளும் ராஜ்யசப எம்.பி.யுமான கனிமொழிக்கு முக்கிய பதவி வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியில் நிலவுகிறது.
தி.மு.க. பொதுக்குழு நாளை அண்ணா அறிவாலயத்தில் கூடுகிறது. இப்பொதுக்குழுவில் தி.மு.க. தலைவராக கருணாநிதி, பொதுச்செயலாளராக க. அன்பழகன், பொருளாளராக மு.க.ஸ்டாலின் ஆகியோர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
து.பொ.செ. கேட்ட கனிமொழி
அத்துடன் கனிமொழிக்கு முக்கிய பதவி ஒன்றும் தரப்பட இருக்கிறதாம். கனிமொழிக்கு துணணப் பொதுச்செயலாளர் தரப்பட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நிராகரித்த கருணாநிதி
ஆனால் கருணாநிதியோ ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் தலைமைக் கழகப் பதவியில் இருப்பது சரியாக இருக்காது என்று நிராகரித்துவிட்டாராம். இதனைத் தொடர்ந்து மாணவர் அணி செயலாளர் கனிமொழி கேட்டிருக்கிறார்.
முட்டுக்கட்டை போட்ட ஸ்டாலின்
இதற்கும் ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டிருக்கிறார். தற்போது மாணவர் அணி செயலாளராக இருக்கும் புகழேந்தி சிறப்பாக செயல்படுகிறார்.. அதனால் அவரை மாற்ற வேண்டாம்.. மகளிர் அணி செயலாளராக கனிமொழியை நியமித்துவிடுங்கள் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
மாணவியர் அணி?
ஆனால் கருணாநிதியோ, மாணவியர் அணி ஒன்றை உருவாக்கினால் என்ன என்று ஆலோசித்து வருகிறாராம். நாளைய பொதுக்குழுவில் கனிமொழிக்கு என்ன பதவி என்பது தெரிந்துவிடும்.
துரைமுருகன்
மேலும் துணைப் பொதுச்செயலராக இருக்கும் துரைமுருகன் ஆர்க்காடு வீராசாமியின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட இருக்கிறது.
ஐ. பெரியசாமி
இதனால் துணைப் பொதுச்செயலராக திண்டுக்கல் ஐ. பெரியசாமியை நியமிக்கப்பட இருக்கிறார்.
திருச்சி சிவா
அதே நேரத்தில் ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா, துணைப் பொதுச்செயலர் பதவியை கேட்டிருக்கிறார். ஆனால் ராஜ்யசபா எம்.பி. பதவியில் இருப்பதால் சமாதானப்படுத்தி வருகின்றனராம்.
ஆ. ராசாவுக்கு பதவி?
மேலும் ஆ.ராசா அல்லது திருவாரூர் மதிவாணன், சுப்புலட்சுமி ஜெகதீசன் அல்லது பூங்கோதை ஆலடி அருணா ஆகியோரில் இருவர் துணைப் பொதுச்செயலராக இருக்கின்றனர்.
திருச்சி மகேஷுக்கு இளைஞரணி
இளைஞர் அணி செயலாளராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தற்போது அந்த இடத்துக்கு மறைந்த திருச்சி அன்பில் பொய்யாமொழியின் மகன் மகேஷுக்கு வழங்கப்பட இருக்கிறதாம்.. சில ஆண்டுகள் கழித்து ஸ்டாலின் மகன் உதயநிதியை அப்பதவியில் உட்கார வைக்க இது முன்னோட்டமாக இருக்கும் என்கின்றனர்.
அப்செட்டில் பொன்முடி, வேலு
தி.மு.க. தலைமைக் கழக பதவி கிடைக்கும் என்று எ.வ.வேலு, பொன்முடி ஆகியோர் எதிர்பார்த்தனர். ஆனால் இருவரது பெயரும் எதிலும் அடிபடவில்லை.
மு.க.ஸ்டாலினுக்கு ஒரு புதிய பதவி கொடுத்து தன்னை பொருளாளராக்குவார்கள் என்று கனவில் இருந்தார் எ.வ.வேலு. ஆனால் அது நடக்கவில்லை. அதனால் எ.வ.வேலு படு அப்செட்டாகி இருக்கிறாராம்.
தெம்பா? பஞ்சாயத்தா?
இதேபோல் தனக்கு எந்த ஒரு பதவியும் கிடைக்காததால் பொன்முடியும் அப்செட்டில் இருக்கிறாராம். பொதுக்குழு தி.மு.க.வினருக்கு புதுத் தெம்பை தருமா? புதிய பஞ்சாயத்தை உருவாக்குமா? என்பது நாளை தெரிந்துவிடும்..