3 தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் செய்யாத கனிமொழி.. கட்டிப்போட்ட ஸ்டாலின் உத்தரவு!
சென்னை: மூன்று தொகுதி தேர்தலிலும் தனது பங்கு இருக்க வேண்டும் என்பதற்காக, திமுகவின் ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி காய் நகர்த்தி வந்தார். திருப்பரங்குன்றம் தொகுதியில் கணிசமாக உள்ள நாடார்கள், நாயக்கர்கள், முத்தரையர் ஆதரவை கனிமொழி கேட்டிருந்தார்.
கனிமொழிக்கு கொடுத்த நம்பிக்கையின் படி , மூன்று இடைதேர்தல் தொகுதிகளிலும் திமுகவை ஆதரித்து முத்தரையர்களும் நாடார்களும் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். கடைசிக்கட்ட தீவிர ஓட்டு வேட்டையிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடைசி இரண்டு நாட்கள் பிரசாரத்துக்கு நீங்கள் வாருங்கள் என கனிமொழியை அழைத்துள்ளனர் அச்சமூகத்தினர். உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம் என்பதற்காக அந்த அழைப்பிதழ். ஆனால், கனிமொழி வர இயலாத சூழலை விவரித்துள்ளாராம். எனவே, கனிமொழி பிரசாரத்துக்கு அவர் வராதது அச்சமூகத்தினருக்கு சற்று வருத்தம். கனிமொழி ஏன் பிரசாரத்துக்குப் போகவில்லை? என அறிவாலயத் தரப்பில் விசாரித்தபோது,
பிரசார பயணத் திட்டமெல்லாம் கனிமொழி போட்டு வைத்திருந்தார். ஆனால், அவர் பிரசாரம் செல்வதற்கான அனுமதியை ஸ்டாலின் தரவில்லை என கூறுகிறார்கள்.
எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன், பிரசாரத்துக்கு செல்ல வேண்டாம் என ஸ்டாலின் ஸ்டிராங்காக சொல்லிவிட்டதால் அதை கனிமொழியால் மீற முடியவில்லை. ஸ்டாலினின் கட்டளையை மீற கனிமொழிக்கு துணிச்சல் ஏது? என்று சொல்கிறார்கள். இன்றுடன் அத்தொகுதிகளுக்கு பிரசாரம் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.