அண்ணன் ஸ்டாலினை ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கனிமொழி!
2ஜி வழக்கிலிருந்து கனிமொழி விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, அண்ணன் ஸ்டாலினை விமான நிலையத்தில் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் கனிமொழி.
சென்னை: 2ஜி வழக்கிலிருந்து கனிமொழி விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து அவரை வரவேற்க சென்னை விமான நிலையத்துக்கு வந்த கனிமொழியை மு.க.ஸ்டாலின் சந்தித்தபோது அவர் ஆரத்தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி
அலைக்கற்றை ஒதுக்கி வழங்கியதில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோரது மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வியாழக்கிழமை வந்தது. அதில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும்...
இதையடுத்து திமுகவினர் டெல்லியில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை கொண்டாடினர். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
அநீதி வீழும்
2ஜி வழக்கிலிருந்து கனிமொழி விடுவிக்கப்பட்டதை அறிந்த கருணாநிதி அநீதி வீழும், அறம் வெல்லும் என்ற வாசகத்தை எழுதி காண்பித்துள்ளார். பின்னர் தொலைபேசியிலும் கருணாநிதியுடன் பேசி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் கனிமொழி.
சென்னை விமான நிலையத்தில்...
2ஜி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து டெல்லியிலிருந்து கனிமொழியும், ஆ.ராசாவும் இன்று சென்னை வந்தனர். அதற்கு முன்னதாக அவர்களை வரவேற்க திமுகவினர் விமான நிலையத்தில் குவிந்தனர்.
கனிமொழி மகிழ்ச்சி
இதையடுத்து சென்னை விமான நிலையத்துக்கு சென்ற ஸ்டாலின், கனிமொழிக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அப்போது ஸ்டாலினை கனிமொழி ஆரத்தழுவினார். இதையடுத்து ஆ.ராசாவும் மகிழ்ச்சியில் ஸ்டாலின் கட்டித் தழுவினார். இதையடுத்து கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து இருவரும் ஆசி வாங்கினர்.
கனிமொழி வீடு
கருணாநிதியை சந்தித்து விட்டு சிஐடி காலனியில் உள்ள தனது வீட்டுக்கு கனிமொழி வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் அக்கா கனிமொழி வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் கோபாலபுரத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.