மாற்றுத்திறனாளிகள் போராட்டத்திற்கு தீர்வு காண்க: ரயில்வே அமைச்சரிடம் கனிமொழி கோரிக்கை
சென்னை: மாற்றுத்திறனாளிகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி திமுக எம்.பி. கனிமொழி, ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவை சந்தித்துப் பேசினார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார ரயில்களில் பயணம் செய்யும் மாற்றுத் திறனாளிகளை ரயில்வே போலீசார் அவமரியாதையாக நடத்துவதாக கூறி மாற்று திறனாளிகள் தெற்கு ரயில்வே தலைமையகம் முன்பு கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் அவர்கள், தங்கள் பிரச்சினை தொடர்பாக தீர்வுகாண உதவும்படி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவை கனிமொழி எம்.பி. சந்தித்து பேசினார். அப்போது அவர் மாற்றுத் திறனாளிகள் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கனிமொழியின் கோரிக்கையை ஏற்ற மத்திய அமைச்சர் சதானந்தகவுடா, மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு தெற்கு ரயில்வே பொது மேலாளரை கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுடன் தெற்கு ரயில்வே பொது மேலாளர் இன்று பேச்சு வார்த்தை நடத்துகிறார்.