வி.எச்.பி யாத்திரைக்கு அனுமதியளித்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி மீது நடவடிக்கை தேவை : கனிமொழி
வி.எச்.பி யாத்திரைக்கு அனுமதியளித்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி மீது நடவடிக்கை தேவை என்று கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளார்.
சென்னை : நெல்லை மாவட்ட ஆட்சியர் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நடக்கிறாரா அல்லது சங் பரிவார அமைப்புகளின் உத்தரவுபடி நடக்கிறாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாக திமுகவின் ராஜ்யசபா எம்.பி.,கனிமொழி தெரிவித்துள்ளார்.
விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ராமராஜ்ய ரத யாத்திரை இன்று கேரளா வழியாக தமிழக எல்லைக்குள் வந்தது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி நடத்தப்படும் இந்த யாத்திரை தமிழகத்திற்குள் வரக்கூடாது என்று வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனை மீறியும் பல்வேறு இடங்களில் போராடியவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர். இதுதொடர்பாக வி.சி.க தலைவர் திருமாவளவன், ஜவாஹிருல்லா, கொளத்தூர் மணி,கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
|
வகுப்புவாத சக்திகள்
இதுகுறித்து திமுகவின் ராஜ்யசபா எம்.பி.,யான கனிமொழி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கலவரம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே நடைபெறும் யாத்திரை தான் சங் பரிவார் அமைப்புகள் நடத்தும் ராம ராஜ்ய ரத யாத்திரை என்பது அனைவரும் அறிந்ததே. அமைதி மாநிலமாக உள்ள தமிழகத்தில் வகுப்பு வாத சக்திகள் காலூன்றுவதை அனுமதிக்காமல் தடுக்க வேண்டியது ஒவ்வொரு தலைவர் மற்றும் அதிகாரியின் கடமை.
|
சட்டம் ஒழுங்கு பிரச்னை
நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவில், ரதயாத்திரைக்கு ஒரு சிறு குந்தகம் ஏற்பட்டாலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும், அப்படி ரத யாத்திரையில் சிக்கலை உருவாக்க சிலர் திட்டமிட்டுள்ளதால்,144 தடைச் சட்டம் பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார்.
|
சங் பரிவார உத்தரவு
ஆனால் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நடக்க வேண்டிய நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பிறப்பித்துள்ள தடை உத்தரவு, அவர் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நடக்கிறாரா, அல்லது சங் பரிவார அமைப்புகளின் உத்தரவின்படி நடக்கிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
|
தலைவர்கள் கைது
இந்த உத்தரவையடுத்து, மதக் கலவரத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கோடு தமிழகத்தில் காலடி எடுத்து வைக்கும் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வரும் சங் பரிவார அமைப்பினருக்கு ஜனநாயக வழியில் எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற, பல தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
|
ஒழுங்கு நடவடிக்கை தேவை
பாரபட்சமற்று செயல்பட்டு, அரசியல் அமைப்புச் சட்டத்தையும், அடிப்படை உரிமைகளையும் காப்பாற்ற வேண்டிய ஐஏஎஸ் அதிகாரி சந்தீப் நந்தூரி, மத உணர்வோடு, ஒரு மதத்துக்கு ஆதரவாகவும், கலவரத்தை தூண்டுவோருக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவு, வன்மையாக கண்டிக்கத் தக்கது. நடத்தை விதிகளை மீறி, செயல்பட்டுள்ள நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மீது தமிழக அரசு உடனடியாக அகில இந்திய அதிகாரிகள் நடத்தை விதிகளின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.