சென்னை எழும்பூர் – மதுரை இடையே ஜனசதாப்தி அதிவிரைவு இயக்கவேண்டும்: கனிமொழி
சென்னை: சென்னை எழும்பூர் - மதுரை இடையே ஜனசதாப்தி அதிவிரைவு ரயில் தினமும் இயக்கப்பட வேண்டும் என்று திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டிய ரயில் திட்டங்கள் குறித்து, மத்திய ரயில்வே அமைச்சருக்கு கனிமொழி அனுப்பியுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
லோகமான்ய திலக் எர்ணாகுளம் வரை செல்லும் துரந்தோ எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி வரை நீட்டிக்கப்பட வேண்டும். சென்னை-மதுரை துரந்தோ ரயில் திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட வேண்டும்.
சிலம்பு எக்ஸ்பிரஸ்
சென்னை- மானாமதுரை சிலம்பு எக்ஸ்பிரஸ் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட வேண்டும். மங்களூர்- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்பட வேண்டும். திருச்சி-அவுரா வாரமிருமுறை எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்பட வேண்டும். மதுரை-டேராரூன், சண்டிகர் வாரமிருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் ஒருமுறை கன்னியாகுமரி வரையிலும் ஒருமுறை ராமேஸ்வரம் வரையிலும் நீட்டிக்கப்பட வேண்டும்.
திருக்குறள் எக்ஸ்பிரஸ்
கன்னியாகுமரி-நிஜாமுதீன் வாரமிருமுறை திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் தினந்தோறும் இயக்கப்பட வேண்டும். கன்னியாகுமரி - புதுச்சேரி வாரம் ஒருமுறை இயக்கப்படும் ரயில் தினந்தோறும் இயக்கப்பட வேண்டும்.
எழும்பூர் – மதுரை ஜனசதாப்தி
சென்னை எழும்பூர் - மதுரை இடையே ஜனசதாப்தி அதிவிரைவு ரயில் தினமும் இயக்கப்பட வேண்டும். கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, திருப்பதி வழியாக ஐதராபாத்துக்கு தினமும் அதிவிரைவு ரயில் இயக்கப்பட வேண்டும்.
ராமேஸ்வரம் சூப்பர் பாஸ்ட்
சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் இடையே தினசரி அதிவிரைவு ரயில் இயக்கப்பட வேண்டும். கேரளாவின் கொச்சுவேலியில் இருந்து திருநெல்வேலி, திருச்சி வழியாக வேளாங்கன்னி - காரைக்காலுக்கு தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும் என்று கனிமொழி தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.