கப்பல்கள் மோதி சென்னை கடலில் எண்ணெய் பரவி அபாயம்.. மத்திய அரசு தலையிட கனிமொழி கோரிக்கை
சென்னை: எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகில் இரண்டு கப்பல்கள் மோதிக் கொண்டன. அப்போது கப்பலில் கொண்டு வரப்பட்ட கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. மத்திய அரசு இதில் தலையிட்டு எண்ணெய்யை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜ்ய சபா எம்பி கனிமொழி கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கனிமொழி எழுதியுள்ள கடிதத்தில், ஜனவரி 29ம் தேதி எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகில் நடந்த விபத்தில் எண்ணெய் கொட்டி கடல் முழுவதும் பரவி வருகிறது. இதனால் சென்னையில் 24 கி.மீ தொலைவிற்கு எண்ணெய் பரவி கடல் மாசடைந்துள்ளது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள், ஆமைகள், மீன் இனங்கள் உயிரிழந்துள்ளன. மேலும், அப்பகுதி முற்றுலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம், அவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை குறித்து பெரும் கவலை ஏற்பட்டுள்ளது.
கப்பல்கள் மோதி சென்னை கடலில் எண்ணெய் பரவி அபாயம்.. மத்திய அரசு தலையிட கனிமொழி கோரிக்கை pic.twitter.com/smYDRQZytE
— Oneindia Tamil (@thatsTamil) February 1, 2017
கடலில் பரவியுள்ள எண்ணெய் கழிவை யார் அகற்றுவது என்ற குழப்பமும் இங்கு நிலவி வருகிறது. இதுதவிர, உரிய பயிற்சி பெறாத அப்பகுதி மக்களும், மீனவர்களும் எண்ணெய்யை அகற்றும் பணியை செய்து வருகிறார்கள். மேலும் அதற்கான உரிய நவீன இயந்திரங்களும் இல்லை. எனவே, மத்திய அரசு இதில் உடனடியாக தலையிட்டு எண்ணெய்யை அகற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்த கப்பல் விபத்து நடைபெற்றது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கனி மொழி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.