மொத்தம் ரூ. 1000 கோடி ஏப்பம்... கனிஷ்க் நிறுவன உரிமையாளர்கள் மொரிஷியஸ் தப்பி ஓட்டம்?
Recommended Video
சென்னை : சென்னையை சேர்ந்த கனிஷ்க் நிறுவனம் வங்கிகளிடம் இருந்து ரூ. 824 கோடி மோசடி செய்த நிலையில், இதன் உரிமையாளர்கள் வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்த மோசடி தொடர்பாக சிபிஐயின் உதவியை எஸ்பிஐ நாடியுள்ளது.
கனிஷ்க் நிறுவனத்திற்கு சென்னை தியாகராய நகரில் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் உள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக பூபேஷ் குமார் ஜெயின் மற்றும் அவரது மனைவி நீதா ஜெயின் உள்ளனர்.
இவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்று வங்கிகள் கூறியுள்ளன. இவர்கள் மொரிஷியஸிற்கு தப்பியோடி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்த மோசடி தொடர்பாக சிபிஐ இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை.
உரிமையாளர்கள் தப்பியோட்டம்
எஸ்பிஐ உள்ளிட்ட 14 பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் கனிஷ்க் நிறுவனத்திற்கு கடன் அளித்துள்ளன. ஜனவரி 25, 2018 அன்று சிபிஐக்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அனுப்பியுள்ள கடிதத்தில் கனிஷ்க் நிறுவனம் போலியான ஆவணங்களைக் காட்டி கடன் வாங்கி விட்டு இரவோடு இரவாக கடையை மூடிவிட்டு தப்பியோடிவிட்டதாக குறிப்பிட்டுள்ளது.
போலி ஆவணங்கள் வைத்து கடன்
வங்கிகள் கனிஷ்க் நிறுவனத்திற்கு ரூ. 824 கோடி கடன் அளித்துள்ளன, வட்டியுடன் சேர்ந்து இந்த நிறுவனத்தால் வங்கிகளுக்கு ரூ. 1000 கோடி இழப்பு ஏற்பட்டுளளது. கடந்த நவம்பர் மாதத்தில் முதன்முதலில் கனிஷ்க்கின் மோசடி குறித்து ஆர்பிஐக்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா புகார் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதத்தில் இதர வங்கிகளும் கனிஷ்க் நிறுவனம் கடன் வாங்கி மோசடி செய்ததாக அறிவித்தன.
2017லேயே கம்பி நீட்டிய பூபேஷ்
கடந்த மார்ச் மாதத்தில் கனிஷ்க் நிறுவன உரிமையாளரின் மோசடி கண்டறியப்பட்டது, முதலில் 8 வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய வட்டியை கொடுக்காததோடு, 14 வங்கிகளுக்கான கட்டணத்தையும் ஏப்ரல் மாதத்தில் நிறுத்தியுள்ளார். சுமார் ஓராண்டு கழித்து கனிஷ்க் நிறுவனத்தின் மோசடி குறித்து தற்போது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சிபிஐயின் உதவியை கோரியுள்ளது.
என்ன செய்கின்றன வங்கிகள்?
வங்கிகளை மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பி செல்லும் தொழிலதிபர்கள் பற்றி வடநாடுகளில் கேள்விபட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து இப்படி ஒரு மோசடி நடந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சாதாரண மக்களிடம் ரூ. 100 செலுத்தாவிட்டால் இரண்டு மடங்கு அபராதம் வசூலிக்கும் வங்கிகள் தொழிலதிபர்கள் விஷயத்தில் மட்டும் கப் சிப்மென கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி கொடுத்துவிட்டு ஏமாற்றிவிட்டு தப்பியோடிவிட்டார்கள் என்று சர்வசாதாரணமாக சொல்வதை அண்மைக் காலமாக வாடிக்கையாகி வருகிறது.