கனிஷ்க் நிறுவனத்தின் ரூ. 48 கோடி சொத்துகள் முடக்கம்
கனிஷ்க் நிறுவனத்தின் ரூ. 48 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கம் செய்தது.
சென்னை: கனிஷ்க் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.48 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கம் செய்தது.
சென்னை வடக்கு உஸ்மான் சாலையில் உள்ளது கனிஷ்க் நகைக் கடை. இந்த நிறுவனம் கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பெரிய பெரிய நகைக் கடைகளுக்கு நகைகளை சப்ளை செய்து வந்தது.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் 14 வங்கிகளில் ரூ.824 கோடி கடன் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக சிபிஐக்கு எஸ்பிஐ வங்கி புகார் கடிதம் அனுப்பியது.
முதலில் பாரத ஸ்டேட் வங்கியில் வங்கிக் கணக்கை தொடங்கி இந்த வங்கியில் இவர்கள் பெற்ற கடனை வருமானமாக கொண்டு 14 வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். இதுபோல் 824 கோடி ரூபாய் கடன் பெற்றனர்.
இந்த கடனுக்கான வட்டித் தொகையானது சுமார் ரூ.160 கோடி ஆகும். ஆனால் இவர்கள் பெற்ற கடனுக்காக வங்கி சார்பில் நோட்டீஸ் அனுப்பியபோதும் எவ்வித பதிலையும் கொடுக்கவில்லை. இதையடுத்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின், அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக சிபிஐயும் அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் புக்கத்துறையில் உள்ள கனிஷ்க் நிறுவனத்தின் ரூ.48 கோடி சொத்தை அமலாக்கத் துறை முடக்கியது.