கடல் சீற்றம்... குமரியில் 3 - வது நாளாக படகு போக்குவரத்து பாதிப்பு: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் 3-வது நாளாக புதன்கிழமையும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழக கடற் பகுதிகளாகிய ராமநாதபுரம் மாவட்டம் முதல் குமரி மாவட்டம் வரையிலான கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டு உள்ளது கிழக்கு மற்றும் மேற்கு கடலோர பகுதியில் சூரை காற்றுடன் கடல் சீற்றம் காணப்பட்டது.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. ஆரோக்கியபுரம் முதல், நீரோடி வரை மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால், மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கடல் சீற்றம் நீடித்து வருகிறது. புதன்கிழமை காலை அலைகள் ஆக்ரோஷமாக எழுந்ததால் காலை 8 மணிக்குத் தொடங்க வேண்டிய படகுப் போக்குவரத்து இரண்டரை மணி நேரம் தாமதமாக 10.30 மணிக்குத் தொடங்கியது.
ஆனால், 11.30 மணிக்கு மீண்டும் நிறுத்தப்பட்டது. பின்னர், பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்கிய படகுப் போக்குவரத்து மாலை 4 மணிவரை நடைபெற்றது. திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைப் பகுதியில் 15 முதல் 20 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்ததால் அங்கு நாள் முழுவதும் படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
முக்கடல் சங்கமம் பகுதியில் கடல் சீற்றத்தால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் வெளியூர் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.