நடிகர் ராஜ்குமார் கடத்தல்.. செப். 25ல் தீர்ப்பு.. வீரப்பனும் இல்லை, ராஜ்குமாரும் இல்லை!
Recommended Video
கோபிச்செட்டிப்பாளையம்: கன்னட நடிகர் ராஜ்குமாரும் மறைந்து விட்டார். அவரை கடத்திய சந்தனக் கடத்தல் வீரப்பனும் மறைந்து விட்டார். இந்த நிலையில் ராஜ்குமார் கடத்தல் வழக்கின் தீர்ப்பு கோபிச்செட்டிப்பாளையம் கோர்ட்டில் செப்டம்பர் 25ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ராஜ்குமார் கடந்த 2000மாவது ஆண்டு ஜூலை 30ம் தேதி தொட்டகாஜனூர் கிராமத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டார். சந்தனக் கடத்தல் வீரப்பன் கும்பல் அவரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலக அளவிலான பரபரப்பையும் இது ஏற்படுத்தியது.
தனது கஸ்டடியில் கிட்டத்தட்ட 108 நாட்கள் வைத்திருந்து பின்னர் ராஜ்குமாரை விடுவித்தார் வீரப்பன். இந்த சம்பவம் தொடர்பாக தாளவாடி போலீஸார் வீரப்பன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த விசாரணை கோபிச்செட்டிப்பாளையம் கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணைக் காலத்திலேயே ராஜ்குமார் 2006ம் ஆண்டு மறைந்தார்.
2004ம் ஆண்டு நடந்த போலீஸ் என்கவுண்டரில் வீரப்பனும், சேத்துக்குளி கோவிந்தனும் கொல்லப்பட்டனர். மீதமுள்ள 9 பேர் மீது விசாரணை நடந்து வந்தது.
தற்போது 18 ஆண்டு காலத்திற்குப் பின்னர் இந்த வழக்கில் 25ம் தேதி தீர்ப்பளிக்கப்படவுள்ளதாக மாஜிஸ்திரேட் மணி அறிவித்துள்ளார். 25ம் தேதியன்று 9 பேரும் நேரில் ஆஜராகவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்:
வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், ரங்கசாமி, கோவிந்தராஜ், அந்தில், பசுவண்ணா, குப்புசாமி, கல்மாடி ஆனந்தன் உள்ளிட்டோர்.
பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், பழ. நெடுமாறன் உள்ளிட்டோர், ராஜ்குமார் விடுதலையில் முக்கியப் பங்கு வகித்தனர் என்பது நினைவிருக்கலாம்.