கன்னட அமைப்புகளின் 2 நாள் எல்லை முற்றுகை.. அச்சம், குழப்பத்தில் ஓசூர் ஐடி ஊழியர்கள்
ஓசூர்: ஏற்கனவே தொடர் போராட்டங்களால் ஸ்தம்பித்துக் காணப்படும் கர்நாடக, தமிழக எல்லைப் பகுதியில் நாளை முதல் 2 நாட்களுக்கு முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக ஒக்கூட்டா எனப்படும் கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழகத்திலிருந்து ஒரு வாகனத்தையும் கர்நாடகத்திற்குள் விட மாட்டோம் என்று வாட்டாள் நாகராஜும் எச்சரித்துள்ளார். இதனால் மீண்டும் 2 நாட்களுக்கு பெங்களூரில் பதட்டமும், தேவையில்லாத குழப்பமும் நிலவும் சூழல் எழுந்துள்ளது.
இந்தப் போராட்டம் காரணமாக ஓசூர் - பெங்களூர் போக்குவரத்து முற்றிலும் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கன்னட அமைப்புகளின் போராட்டம் காரணமாக கடந்த 14 நாட்களாக தமிழக பேருந்துகள் பெங்களூர் செல்ல முடியவில்லை என்பது நினைவிருக்கலாம். எல்லா அரசுப் பேருந்தும் கர்நாடக எல்லை வரையே செல்கின்றன.
இந்த இரண்டு நாள் எல்லை முற்றுகையால் ஐடி நிறுவனங்கள்தான் கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகின்றன. ஓசூரிலிருந்து பெங்களூர் அலுவலகங்களுக்கு வரும் ஐடி ஊழியர்கள் வருகை முற்றிலும் தடைபடும். ஏற்கனவே தொடர் போராட்டங்களால் ஐடி நிறுவனங்களுக்கு வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அசோசம் கூறியுள்ளது. இந்த நிலையில் நாளை தொடங்கும் 2 நாள் முற்றுகைப் போராட்டத்தை சமாளிப்பது குறித்து ஐடி நிறுவனங்கள் அவசர ஆலோசனையில் குதித்துள்ளன.
நூற்றுக்கணக்கான ஐடி ஊழியர்கள்
பெங்களூரில் உள்ள பல்வேறு ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஓசூரில் தங்கி அங்கிருந்து வேலைக்குப் போய் வருகின்றனர். பெங்களூரில் வாடகை, செலவு அதிகம், போக்குவரத்து நெரிசல், சரியான சாப்பாடு கிடைக்காதது உள்ளிட்டவற்றை மனதில் கொண்டு ஓசூரில் தங்கி பெங்களூரில் வேலை பார்த்து வருகின்றனர்.
ஓசூர்தான் சவுகரியம்
மேலும் எலக்ட்ரானிக் சிட்டி உள்ளிட்டவை ஓசூருக்கு பக்கத்தில் இருப்பதால் இங்கிருந்து வேலைக்குப் போவதுதான் சவுகரியம் என்பதாலும் பலர் ஓசூரில் தங்களது ஜாகையை மாற்றி தங்க ஆரம்பித்து விட்டனர். இதனால் குட்டி பெங்களூராக மாறி விட்டது ஓசூர். இதுதான் தற்போது தமிழக ஐடி ஊழியர்களுக்கு பெரிய டென்ஷனாக மாறியுள்ளது.
கன்னட போராட்டத்தால் பெரிய தலைவலி
கன்னட அமைப்புகள் தற்போது காவிரிப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டு எல்லைப் பகுதியான அத்திபலே பகுதியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால் தமிழகத்திலிருந்து ஒரு வாகனமும் கர்நாடகத்திற்குள் நுழைய முடியவில்லை. குறிப்பாக தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் போக முடியாத நிலை நிலவுகிறது.
அப்பாவிகளுக்குப் பெரும் அவதி
இந்த அமைப்புகளின் போராட்டத்தால் அப்பாவி மக்கள்தான் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இயல்பான வாழ்க்கை இப்பகுதியல் தற்போது முடங்கிப் போயுள்ளது. தமிழக ஐடி ஊழியர்களால் தாங்கள் சந்தித்து வந்த பல லாபங்களை இப்பகுதி மக்கள் இழந்து வருகின்றனர். உணவுக் கூடங்கள் வெறிச்சோடியுள்ளன. மெஸ் உள்ளிட்டவற்றில் தமிழக ஐடி ஊழியர்கள்தான் அதிகம் வந்து சாப்பிடுவார்கள். அது பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாம்.
ஓசூரிலிருந்து போக முடியவில்லை
கன்னட அமைப்புகளின் போராட்டத்தால் ஓசூரிலிருந்து பெங்களூருக்குப் பணிக்குப் போவதில் பல ஐடி ஊழியர்களுக்கு பெரும் சிக்கலாக உள்ளது. சொந்த வாகநத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் ரி்ஸ்க் எடுத்துப் போகவும் பலர் அஞ்சுகிறார்கள். இதனால் அலுவலகத்தில் அனுமதி வாங்கிக் கொண்டு வீட்டிலி்ருந்தபடி பலர் வேலை செய்து வருகிறார்களாம்.
வாட்டாளின் எச்சரிக்கை
எல்லை முற்றுகைப் போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்று வாட்டாள் நாகராஜ் வேறு எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும். ஒரு வாகனத்தையும் அனுமதிக்க மாட்டோம். குறிப்பாக தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது என்றார் அவர்.
ஐடி நிறுவனங்களை மிரட்டுகிறார்களா?
வாட்டாள் உள்ளிட்ட கும்பலின் பிடிவாதப் போராட்டங்களைப் பார்க்கும்போது ஐடி நிறுவனங்களை மறைமுகமாக அவர்கள் மிரட்டுவது போல உள்ளது. ஐடி நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் இப்பகுதியில் உள்ள பல்வேறு உற்பத்தி நிறுவனங்களின் தொழிலும் மிகக் கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கர்நாடக அரசு இந்தக் கும்பலை ஒடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது. இதனால் நஷ்டம் ஏற்படப் போவது கர்நாடகத்திற்குத்தான் என்பதைக் கூட உணராமல் கர்நாடக அரசு இருக்கிறதா என்ற ஆச்சரியமும் எழாமல் இல்லை.
2 இடங்களில்
வாட்டாள் நாகராஜ் மேலும் கூறுகையில் நாளை அத்திபலே பகுதியை நூற்றுக்கணக்கான தொண்டர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவார்கள். கர்நாடகத்திற்குள் எந்தத் தமிழக வாகனமும் வர முடியாது. அதேபோல 20ம் தேதி (நாளை மறு நாள்) சாம்ராஜ்நகர் புங்கனூர் எல்லைப் பகுதியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்றார் அவர்.
சுப்ரீம் கோர்ட்டை சீண்டிப் பார்க்கும் கர்நாடகா?
இந்த இரண்டு நாளையும் கன்னட அமைப்புகள் குறி வைத்துப் போராட்டம் நடத்த இன்னொரு காரணமும் உள்ளது. அதாவது நாளை காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதேபோல 20ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் தொடர்ந்த வழக்கு வருகிறது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விசாரணைகளாகும். இதனால்தான் கர்நாடகத்தில் இதையொட்டி மீண்டும் பரபரப்பைக் கிளப்பி மக்களுக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையில் இந்த கன்னட அமைப்புகள் எல்லை முற்றுகையை அறிவித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
கர்நாடக அரசு இவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கினால்தான் அப்பாவிகள் தொடர்ந்து பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும்.