கன்னட அமைப்புகள் முற்றுகை.. எல்லை மூடும் போராட்டத்தால் மக்கள் இரு மாநில மக்கள் அவதி
ஈரோடு: தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர் திறக்கப்பட்ட விவகாரத்தில் கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. மிழக கர்நாடக எல்லையான ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் மலைப்பகுதியில் உள்ள புழுஞ்சூர் பகுதியில் கன்னட அமைப்பினர் நடத்தி வரும் எல்லை மூடும் போராட்டத்தால் பதற்றம் அதிகரித்துள்ளது.
தமிழக கர்நாடக எல்லையான புழுஞ்சூர் பகுதியில் கன்னட அமைப்புகளின் போராட்டத்தால் தொடர்ந்து 3 வாரங்களாக தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் இந்த செக்போஸ்ட்டில் இருந்து கர்நாடகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனங்கள் புழுஞ்சூர் எல்லையோடு நிறுத்தப்படுகிறது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் சரக்கு பொருட்கள் தமிழக பதிவு எண் கொண்ட லாரிகளில் மாற்றப்பட்டு தமிழ்நாட்டுக்கு அனுப்புவதோடு, அதேபோல் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் காய்கறி அத்தியாவசிய பொருட்கள் கர்நாடக பதிவு எண் கொண்ட லாரிகளில் மாற்றப்பட்டு அனுப்பப்படுகிறது.
இந்த சோதனைச் சாவடியில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கன்னட சலுவாளிய அமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் இன்று எல்லை அடைப்பு போராட்டம் என அறிவித்ததால் கடந்த இரண்டு நாட்களாக பதட்டமாக நிலவியது.
இருசக்கர வாகனங்களையும், இரு மாநில போலீசாரும் அனுமதிக்கவில்லை. தமிழக பேருந்துகள் எல்லையோடு நிறுத்தப்படுவதுபோல், கர்நாடக பேருந்துகளும் அவர்களது எல்லையோடு நிறுத்தப்பட்டது.
இன்று நடக்கும் இந்த போராட்டத்தால் இரு மாநில போலீசாரும் புழுஞ்சூர் சோதனைச்சவாடியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழக பகுதியான தாளவாடி, பாரதிபுரம், கும்பாரக்குண்டி, கும்டாபுரம் கிராமங்களிலும் தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
இன்று நடைபெற இருக்கும் போராட்டத்தை கர்நாடக மாநில போலீசார் தடுத்து நிறுத்த சிக்கலா அணை பகுதியில் குவிந்துள்ளனர். வட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்புகள் 500க்கும் மேற்பட்டோர் சாம்ராஜ் நகரில் கூடி அங்கிருந்து எல்லைப்பகுதியான புழுஞ்சூருக்கு வருவதாக அறிவித்ததை அடுத்து மலைப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இருமாநில எல்லையோரங்களிலும் வசிக்கும் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.