காவிரி மேலாண்மை வாரியம்... ரஜினி கருத்துக்கு கர்நாடகாவில் மீண்டும் எதிர்ப்பு!
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுதான் ஒரே தீர்வு என்று ரஜினி கூறியதற்கு கர்நாடகாவில் மீண்டும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்தப் பிரச்சினையில் ரஜினிகாந்த் தலையிடக் கூடாது என்று சில அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இழுத்தடித்து வருகிறது மத்திய அரசு. இந்த விவகாரத்தை நீர்த்துப் போகச் செய்ய மேலும் கால அவகாசம் கேட்டு வருகிறது மோடி அரசு.
இந்த நிலையில் காவிரியில் தமிழர்களுக்கு உள்ள உரிமையை நிலைநாட்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் முன்பு கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் அவரது படங்களை சிலர் எரித்தனர்.
இப்போது மீண்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுதான் ஒரே தீர்வு என மீண்டும் ரஜினிகாந்த் கருத்து கூறினார்.
இதற்கு கர்நாடகாவில் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ரஜினிகாந்த் இந்தப் பிரச்சினையில் தலையிடக் கூடாது. இங்கு வாழும் 1 கோடி தமிழர்களை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும் என கர்நாடக மாநில சேவா சமிதி எச்சரித்துள்ளது.
காவிரிப் பிரச்சினையில் ரஜினி தலையிட்டால் அவருக்கு எதிராகப் போராட்டங்கள் மேற்கொள்வோம் என கன்னட சங்கங்களில் கூட்டமைப்பு கூறியுள்ளது.