மெத்தை விளம்பரத்தில் கண்ணதாசன் பாடல் 'கட்'.. எதிர்ப்புக்கு பணிந்தது ஸ்லீப்வெல்!
சென்னை: மெத்தை விளம்பரத்திற்கு கவிஞர் கண்ணதாசன் எழுதிய, மலர்ந்தும் மலராத.. என்று தொடங்கும் பாசமலர் திரைப்பட பாடலை பயன்படுத்த மாட்டோம் என்று ஸ்லீப்வெல் மெத்தை நிறுவனம் உறுதியளித்துள்ளது. ரசிகர்களின் எதிர்ப்பை தொடர்ந்து மெத்தை நிறுவனம் இம்முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தொலைக்காட்சி சேனல்களில் ஸ்லீப்வெல் மெத்தை நிறுவனம் தனது புதிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டு வந்தது. அதில் மோசமான மெத்தையில் படுத்ததால் தூக்கம் வராமல் கணவன்-மனைவி புரண்டு, புரண்டு படுத்து தவிப்பது போன்ற காட்சியும், பின்னணியில் பாசமலர் திரைப்படத்தில் இடம்பெற்ற மலர்ந்தும் மலராத.. என்று தொடங்கும் பாடலும் ஒளிபரப்பானது.
கண்ணதாசன் ரசிகர்கள் அதிர்ச்சி
மலர்ந்தும், மலராத பூ போல இருக்காதீங்க, தூங்குவதற்கும் விழிப்புணர்வு தேவை என்று கூறி அந்த விளம்பரம் முடிந்தது. ஆனால், இவ்விளம்பரம், பாசமலர் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி கவிஞர் கண்ணதாசன் ரசிகர்களையும் கொந்தளிக்க செய்தது.
பாசமலர் ரசிகர்களும் கோபம்
அண்ணன்-தங்கை உறவை மிக அருமையாக சித்தரித்த பாசமலர் படத்தில் இடம்பெற்ற பாடலை, கணவன்-மனைவி படுக்கையில் புரளும் விளம்பரத்துக்கு பயன்படுத்தியது பாசமலர் ரசிகர்களை காயப்படுத்தியது என்றால், கண்ணதாசன் எழுதிய சூழ்நிலையிலிருந்து மாறுபட்டு மற்றொரு சூழ்நிலைக்காக இந்த பாடல் பயன்படுத்தப்பட்டது கவிஞர் ரசிகர்களை கொந்தளிக்க செய்தது.
கவிஞர்கள் கண்டனம்
"ஸ்லீப்வெல் நிறுவனம் விளம்பர நோக்குடன் பாடலின் கருத்தை தங்கள் இஷ்டத்துக்கு பயன்படுத்தியது கண்டிக்கத்தக்கது" என்று இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் புவியரசு மற்றும் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா போன்றோர் வெளிப்படையாக தெரிவித்தனர். தமிழ் கலைக் களஞ்சியத்தின் உதவி ஆசிரியர் பேராசிரியர் கே.சுப்ரமணியன் மற்றும் திரை விமர்சகரும், திரைச்சீலை புத்தகத்திற்கு தேசிய விருது வாங்கியுள்ள ஜீவானந்தம் ஆகியோரும் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நடவடிக்கை
கண்ணதாசனின் புத்தகங்களை வெளியிடும் அவரது மகன், ஸ்லீப்வெல் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன் அவர்கள் உடனடியாக இந்த விளம்பரம் ஒளிபரப்புவதை நிறுத்தாவிட்டால் சட்டப்படி அவர்கள் மீது வழக்கு தொடுக்கவிருப்பதாகக் கூறினார்.
நிறுத்தம்
இதுகுறித்து, ஸ்லீப்வெல் மெத்தை தயாரிப்பாளர்களான, ஷீலா ஃபோம் நிறுவன உயர் அதிகாரி பிரின்ஸ் குரேஜா கூறுகையில், ‘இந்தப் பாடல் வரிகள் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது என்பதைத் தெரிந்து அது வாடிக்கையாளர்களின் கவனத்தை கவரும் என்று தான் நாங்கள் எங்கள் விளம்பரத்தில் பயன்படுத்தினோம், மற்றபடி வேறு எந்த நோக்கமும் இல்லை' என்றார். ஆனால் எதிர்ப்பை கருத்தில் கொண்டு, ஜூன் 19ம் தேதி முதல் ஸ்லீப்வெல் நிறுவனம், பாசமலர் திரைப்பட பாடலை தவிர்த்துவிடுவதாக கூறியுள்ளது.