இது முழுக்க முழுக்க தனிமனித உரிமை... வீட்டிலேயே பிரசவம் பார்த்த தேனி கண்ணன் பேட்டி
இது முழுக்க முழுக்க தனி மனித உரிமை மீறல் என்று தேனி அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்த கண்ணன் தெரிவித்தார்.
Recommended Video
தேனி: வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பது முழுக்க முழுக்க தனிநபர் மீறலாகும் என்று தேனியில் வீட்டிலேயே பிரசவம் பார்த்த கண்ணன் தெரிவித்தார்.
தேனி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
பொறியியல் பட்டதாரியான கண்ணன் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். கணவன்- மனைவிக்கு இயற்கை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டு. இதனால் இருவருக்கும் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே குழந்தை பெற்று கொள்வது என்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது.
வீட்டில் பிரசவம்
இதன்படி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மகாலட்சுமி மருத்துவர் டெலிவரி தேதி கொடுத்தும் இவர்கள் மருத்துவமனைக்கு செல்லவில்லை. ஆனால் வியாழக்கிழமை மகாலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து கண்ணன், மகாலட்சுமிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துளளார்.
மருத்துவத்துறை
இதையடுத்து நேற்று முன் தினம் காலை அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. எனினும் பிரசவம் முடிந்தும் குழந்தையின் தொப்புள் கொடியுடன் இணைந்துள்ள நச்சுக் கொடியை அகற்றாமல் வைத்திருந்தனர். இந்த சம்பவம் பற்றி மருத்துவத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
கண்ணனின் தந்தை கைது
இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவக்குழுவினர் வந்திருந்தும் அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்தனர். இதனால் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர். இதன் பேரில் கண்ணனின் தந்தை கைது செய்யப்பட்டார்.
செல்ல விருப்பமில்லை
வீட்டிலேயே பிரசவம் பார்த்தது என்பது தவறான விஷயம் என்றும் தண்டனைக்குரிய குற்றம் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கண்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், குழந்தை பிறந்த உடன் என் வீட்டுக்கு வந்த மருத்துவக் குழுவினர் மருத்துவமனையில் அனுமதிக்கச் சொன்னார்கள். என் மனைவிக்கு மருத்துவமனைக்கு செல்ல விருப்பம் இல்லை. அதனால் நானும் மறுத்துவிட்டேன்.
தனிமனித உரிமை மீறல்
அவரவர் விரும்பும் வாழ அனுமதிக்கப்பட வேண்டும். தனிமனித உரிமை மீறல் நடைபெறக் கூடாது. இயற்கை முறைக்கு திரும்புங்கள் என்று கூறும் போது நாம் ஏன் நமது பாட்டில் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட பிரசவ முறையை செய்யக் கூடாது. கடந்த இரு ஆண்டுகளாக நானும் என் மனைவியும் இயற்கை சார்ந்த உணவுகளை மட்டுமே உட்கொண்டோம். நாங்கள் இதுவரை துரித உணவுகளை உண்டதில்லை. ரசாயனம் கலந்த மைதாவை நாங்கள் சாப்பிட்டதில்லை.
மனைவியேதான் பார்த்தார்
அதுபோல் இயற்கை முறையில் கிடைக்கும் உணவை உட்கொண்டோம். எங்கள் குழந்தை ஆரோக்கியமாகத்தான் உள்ளது. இது ஏதோ நாங்கள் தவறு செய்துவிட்டது போல் சித்தரிக்கின்றனர். மேலும் பிரசவத்தை நான் பார்க்கவில்லை. என் மனைவியேதான் பார்த்துக் கொண்டார் என்றார் கண்ணன்.