மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் வெடிகுண்டு... போலீசார் கைப்பற்றி விசாரணை
கன்னியாகுமரி : கடலில் மீனவர் விரித்த வலையில் சிக்கிய ராக்கெட் குண்டை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து வின்சென்ட் என்பவருக்கு சொந்தமான படகில் அப்பகுதி மீனவர்கள் கடந்த 29 ஆம்தேதி மீன்பிடிக்க சென்றனர்.
கடலில் வலையை விரித்துவிட்டு வந்த இவர்கள், வலையை நேற்று எடுக்க சென்றனர். அப்போது வலையை இழுப்பது கடினமாக இருந்ததால், அதிக அளவில் மீன் சிக்கியிருக்கலாம் என்று மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வலையை இழுத்து பார்த்த போது, வலைக்குள் சுமார் 2 அடி நீள இரும்பு பொருள் ஒன்று இருந்தது. கரைக்கு வந்ததும் இதுகுறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் உளவுப்பிரிவு போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பொருளை சோதனையிட்ட போது அது ராக்கெட் வெடிகுண்டு என்பது தெரியவந்தது. அதில் டார்பிடோ 1.5.1971 என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ராக்கெட் குண்டு நீர்வழி தாக்குதலுக்கு பயன்படுத்தப்படுவது என்று போலீசார் தெரிவித்தனர்.