கனிஷ்க் நிறுவனத்தின் ரூ.138 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்
கனிஷ்க் நகைக்கடை நிறுவனத்தின் ரூ.138 கோடி மதிப்புள்ள சொத்து அமலாக்கதுறையால் முடக்கம்
சென்னை: கனிஷ்க் நகைக்கடை அதிபர் பூபேஷ் குமார் ஜெயினுக்கு சொந்தமான ரூ.138 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
தி.நகர் உஸ்மான் சாலையில் கனிஷ்க் நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடையின் உரிமையாளர் நுங்கம்பாக்கத்தில் உள்ள பூபேஷ் குமார் ஜெயின், இவரது மனைவி, நீடா ஜெயின். கூட்டாளிகள், தேஜ்ராஜ் அச்சா, அஜய்குமார் ஜெயின், சுமித் கெடியாவுடன் சேர்ந்து, சென்னை உட்பட, பல நகரங்களில், 'கனிஷ்க் ஜுவல்லர்ஸ்' என்ற பெயரில், நகை கடை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்நிலையில் கடையில் இருந்த தங்கம், வைர நகைகளின் இருப்பை அதிகப்படுத்தியும் ஆண்டு இறுதி லாபத்தை அதிகப்படுத்திக் காட்டியும் பாரத ஸ்டேட் வங்கி உள்பட 14 வங்கிகளில் ரூ.814.25 கோடி கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மோசடி குறித்து, பாரத ஸ்டேட் வங்கி அளித்த புகாரின் பேரில் சிபிஐ பூஷ்குமார் ஜெயின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் பூபேஷ் குமார் ஜெயின் கடந்த மே 25 ஆம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதோடு அவர் வங்கியில் நிரந்தர வைப்புத்தொகையாக செலுத்தியிருந்த ரூ.143.8 கோடி முடக்கப்பட்டது.
இந்நிலையில், அமலாக்கத்துறை நேற்று கனிஷ்க் நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் சொத்துகளின் மீது மேலும் ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. அதில், கனிஷ்க் ஜுவல்லர்ஸ் நிறுவனத்துக்கு புக்கத்துறை, நடராஜபுரம் கிராமத்தில் சொந்தமாக உள்ள, நகை தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்த, 48 கோடி ரூபாய் மதிப்புள்ள, தங்கம் மற்றும் அசையா சொத்துக்களையும், காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பாக்கத்தில் உள்ள 135 சென்ட் நிலம் மற்றும் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு. கத்தீட்ரல் சாலையில் உள்ள கடை, மஹாராஷ்டிராவில் உள்ள வீடு என பல பகுதிகளில் உள்ள ரூ.138 கோடி மதிப்பு உள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.