மதுரை-சென்னை துரந்தோ ரயிலை திருவனந்தபுரம் வரை நீட்டிக்க கிறிஸ்தவ பேரவை கோரிக்கை
சென்னை: மதுரை - சென்னை துரந்தோ ரயிலை நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டித்து இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரயில் காலஅட்டவணையில் மதுரை - சென்னை துரந்தோ ரயிலை நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்து இயக்க கன்னியாகுமரி சென்னை வாழ் கிறிஸ்தவ பேரவை கோரிக்கை சார்பாக ரயில்வே அமைச்சர் மற்றும் இரயில்வே அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அளிக்கபட்டது. கோரிக்கை குறித்து பேரவையின் செயலாளர் சேம் மனோகர் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மம்தா பானர்ஜி ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது, இடைநில்லா பாயின்ட் டூ பாயின்ட் செல்லும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. தெற்கு ரயில்வேயில் சென்னை - நிசாமுதீன் (புது டெல்லி) சென்னை - கோவை, எர்ணாகுளம் -மும்பை, எர்ணாகுளம் - நிசாமுதீன், மதுரை -சென்னை, திருவனந்தபுரம் -சென்னை போன்ற வழித்தடங்களில் துரந்தோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் பல பகுதிகளில் இயக்கப்படும் இந்த ரயிலுக்கு பயணிகள் இடையே வரவேற்பு இருந்த போதிலும், சில ரயில்கள் நஷ்டத்தில் இயங்கி வந்தன. இதனால், ஒரு சில இடங்களில் நஷ்டத்தில் இயங்கும் துரந்தோ ரயில்களை நிறுத்தப்பட்டு வேறு பெயர்களில் இயக்கப்பட்டன.
சில ரயில்கள் இன்டர்சிட்டி எக்ஸ்பிரசாகவும், சில ரயில்கள் ஏசி எக்ஸ்பிரசாகவும் மாற்றம் செய்து இயக்கப்படடது. இந்த துரந்தோ ரயில்கள் இடைப்பட்ட நிலையங்களில் நிற்காமல் செல்வதால் மற்ற பகுதியை சார்ந்த பயணிகள் பயணம் செய்ய முடியாது. எடுத்துகாட்டாக மதுரையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் துரந்தோ ரயில் மதுரையை சார்ந்த பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். இதனால் மதுரை துரந்தோ ரயில் பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இன்றி அதிகபடியான நாட்கள் காலியாகவே இயங்கி வந்தது.
சென்னை சென்ட்ரலிருந்து திருவனந்தபுரத்துக்கு வாரம் இருமுறை இயக்கப்படும் துரந்தோ எக்ஸ்பிரஸ், கடந்த 2012-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயில் பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாதலால் இந்த ரயில் நஷ்டத்தில் இயங்கி வந்ததால் இந்த ரயிலை முழுவதும் குளிர்சான பெட்டிகள் கொண்ட ரயிலாக மாற்றம் செய்து கூடுதல் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டு கடந்த ஆண்டு முதல் இயக்கியது.
தற்போது மதுரை - சென்னை துரந்தோ ரயில் பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் தற்போது சேலம் ரயில் நிலையத்தில் நிறுத்தத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
குமரி மற்றும் நெல்லை மாவட்டத்திலிருந்து சென்னைக்கு இரண்டு இரவு நேர தினசரி ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் ஆண்டு முழுவதும் கூட்டம் நிரம்பிவழிகிறது. இதனால் தென் மாவட்ட பயணிகள் சென்னை சென்றுவர செல்லமுன்பதிவு பயணச்சீட்டு கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.
தற்போது இயங்கிகொண்டிருக்கும் அனைத்து தென்மாவட்ட ரயில்களில் தினசரி காத்திருப்போர் பட்டியல் 200 நபர்களை தாண்டி தற்போது உள்ளது. தென் மாவட்ட பயணிகள் தற்போது குளிர்சாதன பெட்டிகளில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தென் மாவட்டத்திலிருந்து தினசரி இருபதுக்கும் மேற்பட்ட தனியார் வால்வோ ஆம்னி குளிர்சாதன பேருந்துகள் தற்போது வெற்றிகரமாக இயங்கிவருகிறது. தென் மாவட்டத்திலுள்ள பயணிகள் குளிர்சாதன வசதிகொண்ட வாகனங்களில் அதிக அளவு பயணம் செய்ய விரும்புகின்றனர்.
சென்னை-நாகர்கோவில் வழி தடம் தெற்கு ரயில்வே வழி தடங்களில் அதிக வருமானம் அளிக்கும் வழி தடம் ஆகும். இந்த வழி தடத்தில் அதிக ரயில்கள் இயக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். இந்திய ரயில்வேதுறை பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே பல்வேறு வகைகளில் அதிவேகமாகபயணிக்கும் வகையில் சொகுசு ரயில்களை இயக்கிவருகிறது.
இந்த ரயில்கள் ராஜதானி, கரீப்ரத் என்றுசொல்லப்படும் ஏழைகளின் ரதம், சதாப்திரயில், டொரோண்டோரயில், ஜனசதாப்தி, இரண்டு அடுக்கு பெட்டி ரயில்கள் என்றபெயர்களில் இயங்கிவருகிறது. தமிழ்நாட்டில் இயக்கப்படும் இது போன்ற அனைத்து ரயில்களும் சென்னையுடன் நின்றுவிடுகிறது.
மதுரைக்கு தெற்கே உள்ள தென்மாவட்டங்களில் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை இதுபோன்ற ரயில்களில் எதாவது ஒரு ரயிலின் ஒரு வாராந்திர ரயில் சேவை கூட இதுவரை இயக்கப்படவில்லை. இதனால் தென்மாவட்டங்களில் உள்ள பயணிகள் இவ்வாறு கூட ரயில்கள் இயக்கப்படுகின்றன என்பதை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லாமல் உள்ளனர்.
தற்போது இயக்கப்பட்டுவரும் மதுரை - சென்னை துரந்தோ ரயிலை நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்து அனைத்து முக்கிய ஏ பிரிவு ரயில் நிலையங்களிலும் நின்று, தினசரி ரயிலாக மாற்றி செல்லதக்கவகையில இயக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.
இவ்வாறு இயக்கும் போது நாகர்கோவில், நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் போன்ற பகுதிகளை சார்ந்த பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த ரயில் நிலையங்களில் நின்று செல்வதால் ரயில்வேதுறைக்கும் அதிக வருமானம் கிடைக்கும். அக்டோபர் மாதம் வெளியிடப்படும் ரயில்கால அட்டவணையில் இந்த ரயிலை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி சென்னை வாழ் கிறிஸ்தவ பேரவை கோரிக்கை கோரிக்கை விடுக்கின்றனர்.