கன்னியாகுமரி அதிமுகவில் புகைச்சல்... மாவட்ட செயலாளரை மாற்ற மனு கொடுத்த முன்னாள் அமைச்சர்
கன்னியாகுமரி மாவட்ட செயலாளரை மாற்றக்கோரி அ.திமு.க.தலைமைக்கழக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் பச்சைமால் தலைமையில் அ.தி.மு.கவினர் புகார் மனு அளித்துள்ளனர்.
சென்னை: கன்னியாகுமரி மாவட்ட செயலாளரை மாற்றக்கோரி முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால் தலைமையில் தலைமைக் கழகத்தில் ஏராளமான அ.திமு.க.வினர் புகார் மனு அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால் தலைமையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் வேன்களில் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை கழகத்துக்கு திரண்டு வந்தனர்.
அ.தி.மு.க. தொண்டர்களிடம் புகார் மனுக்கள் வாங்கிக் கொண்டிருந்த அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் அந்த மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் விஜயகுமார் மீது புகார் மனு கொடுத்தனர். இது பற்றி கூறிய முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால் கூறுகையில்,
கட்சியின் உண்மையான தொண்டர்களை இப்போதுள்ள மாவட்ட செயலாளர் மதிப்பதில்லை. மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர் பதவியை தி.மு.க.வினருக்கு அளிக்க அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார். இதனால் கட்சி தொண்டர்களிடையே அதிருப்தி நிலவுகிறது. எனவே மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்துள்ளோம்" என்றார். மேலும் அவர், இது தொடர்பாக நாளை காலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து மனு கொடுக்கப் போவதாக கூறினார்.