ரோடா இது?... ஒரே பள்ளமா இருக்கே... குழித்துறையில் விஜயதாரணி எம்.எல்.ஏ திடீர் போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தின் மோசமான சாலைகளைக் கண்டித்து எம்.எல்.ஏ விஜயதாரணி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.
குழித்துறை: விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி குழித்துறை தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் திடீர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி - திருவனந்தபுரம் சாலையில் நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்ளிட்ட இடங்களில் மேம்பால பணிகள் நடந்து வருகிறது.
மார்த்தாண்டம் பகுதியில் போக்குவரத்து செல்ல முடியாததால் மேல்புறம், ஞாறாம்விளை வழியாக பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இயக்கப்படுகிறது.
இதனால் இந்த சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு மக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். சாலைகளில் ஏற்பட்டுள்ள பாதாள குழிகளை மூடக் கேட்டும், சாலைகளை சீரமைக்க பலமுறை கேட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், கன்னியாகுமரி விளவங்கோடு சட்டசபை தொகுதி உறுப்பினர் விஜயதரணி குழித்துறை நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் வந்து உதவி கோட்டப்பொறியாளர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.
அதிகாரிகள் குண்டும் குழிகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், விரைவில் மொத்த சாலைகளும் சீரமைக்கப்படும் என உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.