வலை நிறைய வஞ்சிரம், பாறை மீன்கள்... கடலுக்குச் சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் மகிழ்ச்சி
மீன்பிடித் தடைக்காலம் முடிந்த நிலையில் மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் அதிக அளவு மீன்கள் கிடைத்த நிலையில் மகிழ்ச்சியோடு கரை திரும்பியுள்ளனர்.
கன்னியாகுமரி: மீன்பிடித் தடைக்காலத்திற்குப் பிறகு கடலுக்குச் சென்ற மீனவர்கள் அதிக அளவு மீன்களுடன், மகிழ்ச்சியோடு கரை திரும்பினர்.
மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீண்டும் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்களுக்கு அதிக அளவிலான விலை உயர்ந்த மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் முடிவடைந்தது.
இதையடுத்து, கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள விசைப்படகு மீனவர்கள் நேற்று அதிகாலை முதல் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 400 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் 20 நாட்கள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, ஆழ் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு வஞ்சிரம், பாறை, கனவாய், நவரை, திருக்கை உள்ளிட்ட விலையுயர்ந்த மீன்கள் அதிக அளவில் கிடைத்தன.
மேலும் சிறிய ரக மீன்களான மத்தி, வாளை, காரப்பொடி ஆகியவையும் அதிகளவில் கிடைத்தது. இரண்டு மாத காலமாக வெறிச்சோடிக் காணப்பட்ட சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகம் மீனவர்கள் மற்றும் வியபாரிகள் வருகையால் களை கட்டியுள்ளது.
அரபி கடல் பகுதிகளில் தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால், கேரள வியாபாரிகள் அதிக விலை கொடுத்து, கன்னியாகுமரி மீன்களை வாங்கிச் சென்றதால், மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.