ஓகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்பதில் அலட்சியம்-கேரளாவில் அடைக்கலமாவோம் என குமரி மக்கள் எச்சரிக்கை
மீனவர்களை கண்டுபிடிப்பதில் தமிழக அரசு தாமதம் செய்தால் கேரளாவிடம் அடைக்கலம் கோரப்போவதாக குமரி மாவட்ட மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
குழித்துறை: ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிப்பதில் தமிழக அரசு தாமதம் செய்தால் கேரளாவிடம் அடைக்கலம் கோரப்போவதாக குமரி மாவட்ட மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 30ம் தேதி கன்னியாகுமரியை புரட்டிப் போட்ட ஓகி புயல் ஆயிரக்கணக்கான மீனவர்களின் நிலை என்ன என்பதை தெரியாமல் போக வைத்துள்ளது. ஆழ்கடல் மீன்பிடிக்கச் சென்றவர்கள் சிலர் குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா கடற்பகுதியில் கரை சேர்ந்தாலும், சுமார் ஆயிரம் மீனவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை என்பது கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராம மக்களின் கவலை.
கடலில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குமர் மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று குழித்துறை ரயில் நிலையத்தில் 8 கிராம மீனவர்கள் மறியல் போராட்டம். பெண்கள் உள்பட சுமார் 5 ஆயிரம் பேர் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேடுதல் எல்லையை விரிவுபடுத்த வேண்டும்
காணாமல் போன மீனவர்களை சுமார் 60 நாட்டிகல் மைல் வரை மட்டுமே தேடி விட்டு தமிழக அரசு கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுவதாகவும். தேடுதல் பரப்பை 200 நாட்டிகல் மைல் வரை நீட்டிக்க வேண்டும் என்பது மீனவ மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
8 நாட்களாக காணவில்லை
மீனவர்களை தேடுவதில் கேரள அரசு முனைப்பாக இருப்பதாகவும், தமிழகம் அதில் போதிய கவனம் செலுத்த வில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. கடலுக்கு சென்ற தங்களின் குடும்பத்தாரின் நிலை என்ன என்று தெரியாமல் 8 நாட்களாக பதைபதைப்புடன் இருப்பதாக மீனவர்களின் குடும்பப் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
நடந்தே சென்று அடைக்கலம் கோருவோம்
மீனவர்களை மீட்பதை தமிழக அரசு தொடர்ந்து புறக்கணித்தால் 38 கி.மீ. தொலைவு நடந்து சென்று கேரளாவிடம் அடைக்கலம் கோருவோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீனவ கிராமங்களில் சுமார் ஆயிரம் பேருடன் தொடங்கிய பேரணி மக்கள் அணிஅணியாக திரண்டு வந்து பங்கேற்றதால் மாபெரும் தன்னெழுச்சி போராட்டமாக குமரி மீனவர்களின் போராட்டம் மாறியுள்ளது.
கொந்தளிக்கும் மீனவ பெண்கள்
பெரும்பாலான மீனவ குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் கடலுக்கு சென்றுவிட்ட நிலையில் பெண்கள் தாங்கள் மட்டும் எப்படி வாழ முடியும். அரசு இதற்கு ஒரு முடிவு செய்து மீனவர்களை தேடுவதை தீவிரப்படுத்தினால் ஒழிய அனைவரும் கடலில் விழுந்து உயிரை விடுவதை விட வேறு வழியில்லை என்று கொந்தளிக்கின்றனர் மீனவப் பெண்கள்.