பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்க்காத முதல்வர், பிரதமர்... மறக்காதீர்கள் மக்களே!
கன்னியாகுமரியில் புயல் பாதித்த பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறியக் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு நேரமில்லை. ஓட்டு கேட்டு வரும் போது இதனை மறக்காதீர்கள் மக்களே.
கன்னியாகுமரி : மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைப்பார்கள் என்பதற்காகவே மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆனால் பேரிடர் பாதிப்புகள் குறித்து பாதிக்கப்பட்ட மக்களைக் கூட சந்திக்க நேரமில்லாத முதல்வர், பிரதமர் ஓட்டு கேட்டு உங்களை தேடி வரும் போது இதனை மறந்து விடாதீர்கள் மக்களே.
கன்னியாகுமரி இந்த ஆண்டில் மிக மோசமான பாதிப்பை சந்தித்த மாவட்டம். 2 நாட்கள் விடாமல் சுழன்றடித்த ஓகி புயல் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது. பல இடங்களில் வெள்ளம் புகுந்தது, மின்சாரம் தடை பட்டது, ஆயிரக்கணக்கான மரங்கள் வேறோடு சாய்ந்தது என்று சேதங்கள் சொல்லி மாளவில்லை.
நகர்ப்பகுதி மக்களுக்கு இது ஒரு வார பிரச்னை தான், ஆனால் குமரியை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல ஏக்கர் ரப்பர் மரங்கள், தென்னை, வாழை மரங்கள் என்று சேதங்கள் பட்டியல் நீள்கிறது. விவசாயிகள், நகர்ப்புற மக்களுக்காவது பொருட்சேதம் தான், ஆனால் மீனவ கிராம மக்களுக்கு யாராலும் ஈடு செய்ய முடியாத உயிர்ச்சேதம்.
ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற குடும்ப உறுப்பினர்கள் என்ன ஆனார்கள், அவர்கள் திரும்பி வருவார்களா வரமாட்டார்களா என்ற கவலை ஒரு புறம். மற்றொரு புறம் தப்பி பிழைத்து ஊர் வந்து சேர்ந்தாலும் லட்சக்கணக்கில் செலவு செய்து கடன்பட்டு வாங்கிய படகுகளுக்கு ஏற்பட்டிருக்கும் சேதத்தை சரிசெய்ய முடியாமல் வாழ்வாதாரமே சூனியமாகிப் போய் முடங்கியுள்ளவர்கள் மறுபுறம்.
புயல் பாதிப்புகளை பார்வையிட அதிகாரிகள், அமைச்சர்கள் குழுவை நியமித்தார் முதல்வர் பழனிசாமி. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் வந்து பார்வையிட்டு சென்றாலும் அதனால் மக்களுக்கு எந்த பயனுள்ள அறிவிப்பும் வெளியாகவில்லை. தமிழகத்திலேயே இருந்து கொண்டு சீர் குலைந்து கிடக்கும் குமரியை பார்க்க முதல்வர் செல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு புயல் பாதிப்புகளை பார்வையிட சென்ற முதல்வர், மக்கள் நடமாட்டமே இல்லாத விவசாய நிலத்தையும், கல்லூரி ஒன்றில் வைத்து மீனவப் பிரதிநிதிகளையும் சந்தித்து விட்டு நிவாரணத் தொகையை உயர்த்தி ஒரு அறிவிப்பை வெளியிட்டு விட்டு கிளம்பி வந்தார். மார்த்தாண்டம்துறை அருகில் உள்ள கிராமம் வரை சென்றவர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மீனவர்களை நேரில் சந்திக்காதது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே இன்று கன்னியாகுமரிக்கு 19 நாட்களுக்குப் பிறகு வந்த பிரதமர் நரேந்திர மோடியும் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்காமல் விருந்தினர் மாளிகையில் வைத்து சில விவசாயிகள் மற்றும் மீனவர்களை சந்தித்து விட்டு 90 நிமிடத்தில் மீண்டும் புறப்பட்டு சென்றுள்ளார். புயல் சேதம், மீனவர்களை காணவில்லை என்று மக்கள் கண்ணீர்விட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறக்கூடவா பிரதமருக்கும், முதல்வருக்கும் நேரமில்லை என்பது தான் இப்போதைய கேள்வி.
தேர்தல் என்றால் மட்டும் எந்த பாதுகாப்பு நலனையும் பாராமல் மக்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று வாக்கு கேட்கும் மக்கள் பிரதிநிதிகள், பேரிடர் காலத்திலும் அதைத் தானே செய்ய வேண்டும். அப்படி செய்யாமல் சடங்கிற்காக வந்துவிட்டு போவது எதற்காக. இதையெல்லாம் வாக்கு கேட்டு உங்களை நாடி அரசியல் கட்சியினர் வரும் போது மறந்துவிடாதீர்கள் மக்களே.