தமிழகத்தில் சட்ட விரோத ஆட்சி நடக்கிறது.. ஹைகோர்ட்டில் கபில் சிபல் அதிரடி வாதம்
சென்னை: அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணி மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கபில் சிபல் வாதிட்டார்.
துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், செம்மலை, க.பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ. க்களை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக கொறடா அர.சக்கரபாணி வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 2017 பிப்ரவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அனுமதி பெறவில்லை
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்ற அதிமுக சட்டசபை உறுப்பினர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் ஆறுக்குட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், கே. பாண்டியராஜன், மனோரஞ்சிதம், சரவணன், செம்மலை, சின்னராஜ், ஆர். நடராஜ் ஆகியோர் அரசு கொறடா உத்தரவை மீறி வாக்களித்து உள்ளனர். அருண்குமார் எம்.எல்.ஏ. வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார். இதற்காக அவர் சார்ந்த கட்சியிடமும் அவர் அனுமதி பெறவில்லை.
சபாநாயகர் நடவடிக்கை இல்லை
அரசு கொறடா உத்தரவுக்கு எதிராக நடந்து கொண்ட ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ. க்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் முருகுமாறன், தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், பார்த்திபன் ஆகியோர் சபாநாயகரிடம் மனு கொடுத்தனர். ஆனால், அதன் மீது சபாநாயகர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மனுவில் கோரிக்கை
ஆகவே, அரசு கொறடா உத்தரவுக்கு எதிராக நடந்து கொண்ட 12 எம்.எல்.ஏ. க்கள் மீது தமிழக சட்டமன்ற விதிகள் 1986 ல் கூறப்பட்டுள்ள தகுதி நீக்கம் தொடர்பான பிரிவுப்படி, நடவடிக்கை எடுக்கும்படி, சபாநாயகர், சட்டமன்ற செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
கபில் சிபல் வாதம்
திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டு வருகிறார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட கபில்சிபல், சபாநாயகர் பாரபட்சமாக நடந்து கொண்டதாகவும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு ஆட்சி நடக்கிறது என்று குற்றம்சாட்டினார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன், சபாநாயகர் என்ன மாதிரி முடிவை எடுக்க வேண்டும் என்பதை நீதிமன்றத்தால் தீர்மானிக்க முடியாது என வாதிட்டார்.
இதையடுத்து, வழக்கு விசாரணை பிப்ரவரி 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.