இன்று காரடையான் நோன்பு... எமனிடம் போராடி கணவனை மீட்ட சாவித்திரியின் கதை தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் காரடையான் நோன்பு இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நோன்பு சுமங்கலிகளுக்கு தீர்க்க சௌமங்கல்யத்தை அளிப்பதற்காக
ஏற்பட்டது. காரடையான் நோன்பு இருந்தால், கணவன் நீண்ட ஆயுளுடன் இருப்பார். தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதீகம்!
மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் நேரத்தில் வரும் 'மாசிக்கயிறு பாசிப்படியும்' என்று சொல்வார்கள் ஆகையால் மாசி முடியும் தருணத்தில் அல்லது பங்குனிப் பிறப்பு நாளில் இதை அனுஷ்டிப்பது வழக்கம். இந்த நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக்கொள்வது விசேஷமானது! இந்த நோன்பு செய்யும்போது கீழ் வரும் ஸ்லோகத்தை சொல்லவும்.
அம்மனை பிரார்த்தனை செய்து படத்தின் முன்னால் சிறிது இலை/தட்டு வைத்து, அதில் அடை சிறிது வெண்ணை, வெற்றிலைப் பாக்கு மஞ்சள்
கயிறுகளையும் அதில் வைத்து விட வேண்டும். 'உருக்காத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன் அதாவது' உருகாத வெண்ணையுக் ஓரடையும் நான் வைக்க என் கணவன் என்னைவிட்டு என்றும் பிரியாமல் இருக்கவேணும்' என்று சொல்லி சரடு கட்டிக் கொள்வார்கள்.
காரடையான் நோன்பின் தத்துவம் கணவனோடு எப்பொழுதும் சுமங்கிலியாக வாழவேண்டும் என்பதுதான். இதற்கு சத்யவான் சாவித்திரியின் கதையை கூறுகின்றனர்.
சத்யவான் சாவித்ரி கதை
சாவித்திரி என்ற ராஜகுமாரி சத்யவானை மணம் முடிக்க ஆசை கொண்டாள். தனது தந்தையிடம் தனது விருப்பத்தை கூறினாள். அப்போது நாரதர் அங்கே வந்த நாரதர், இன்னும் ஒரு வருடத்தில் சத்யவான் மரணம் அடைவான் என்ற அதிர்ச்சியான தகவலைத் தந்து எச்சரித்தார்.
ஆனால் சாவித்ரி தனது நிலையில் மிக உறுதியாக இருந்ததால் அரசர் தன் மகளைச் சத்யவானுக்குத் திருமணம் செய்துகொடுத்தார். அரண்மனை வாசம் போய் காட்டின் அருகில் ஒரு சிறிய குடிசையில் வாழ்ந்தாள். மாளிகை விட்டு வந்த சாவித்திரி அதிலும் இன்பத்தைக் கண்டாள்.
தன் கணவனின் உயிரைக்காக்க பார்வதி செய்த விரதத்தை மேற்கொண்டாள் சாவித்ரி. ஏழ்மையான நிலையிலும் தனக்கு கிடைத்த நெல்லிருந்து அரிசியைப் பொடியாக்கி, அதில் காராமணியும் சேர்த்து அடை போல் தட்டி வெண்ணெய்யுடன் நைவேத்தியம் செய்தாள். பின் மஞ்சள் சரடினை சுமங்கலியாக இருக்க பிரார்த்தித்து அணிந்து கொண்டாள்.
அந்த நாளும் வந்தது. சத்தியவான் விறகு வெட்டும்போது பாம்பின் ரூபமாக எமன் வந்தான். அவனைக் கொட்டினான். தள்ளாடியபடியே அவன் கீழே சாய சாவித்திரி அவனைத் தாங்கிப் பிடித்தாள். கற்பின் வலிமையால், யமனும் அவள் கண்ணில் பட்டான். அவன் உயிரைக் கொடுக்கும்படி வாதிட்டாள். கதறி அழுதாள். பின் தொடர்ந்தாள்.
சாவித்திரியின் கண்ணீர் எமனின் மனதை நெகிழ வைத்தது. உடனே சாவித்திரியிடம், 'நான் என் கடமையைத் தான் செய்கிறேன். அவன் உயிரைத் தவிர வேறு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன்' என்றான்.
தனது புத்தியை உபயோகித்த சாவித்திரி, 'எமராஜனே என் வம்சம் வாழையடியாகத் தழைத்து வளரவேண்டும்' என்றாள். 'சரி அப்படியே ஆகட்டும் ' என்று வரமளித்தார் எமதருமன்!
உங்கள் வரத்தின்படி சத்தியவான் இல்லாமல் குலம் எப்படித் தழைத்து ஓங்க முடியும்" என்று பதிலுக்கு சாவித்திரி கேட்க, வேறு வழியில்லாமல் சத்தியவானின் உயிரைத் திரும்பிக் கொடுத்தார் எமதருமன்.
சாவித்திரியின் பக்தியும் அன்பும் கற்பும் எமனையும் வென்று தன் கணவனின் உயிரையும் காத்தது.
இன்று காரடையான் நோன்பு தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. சுமங்கலி பெண்கள் விரதமிருந்து புது சரடு கட்டிக்கொண்டு காரஅடை செய்து வழிபட்டனர்.