நெல்லையில் காணாமல் போன கரகாட்ட பெண்ணின் மகள் - தேடுதல் தீவிரம்!
நெல்லை: நெல்லையில் கரகாட்ட கலைஞரான பெண் ஒருவரின் மகள் திருமணமான சில மாதங்களில் காணாமல் போயுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை டவுன் மகிழ் வண்ணநாதபுரத்தினை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். கரகாட்ட கலைஞர். இவர்களுக்கு கஸ்தூரி என்ற மகள் உள்ளார்.
இவருக்கும் ஸ்ரீவைகுண்டம் செச்சத்தெருவை சேர்ந்த இசக்கி மகன் ஐயப்பனுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஐயப்பன் பிளாஸ்டிக் பொருள் விற்பனை செய்து வந்தார்.
இவர்கள் இருவரும் திருமணம் ஆனது முதல் மனவருத்தமாகவே வாழ்ந்து வந்தனர். கடந்த 3 ஆம் தேதி மாலை 3.45 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்தில் வைத்து கஸ்தூரி தனது தாயார் மாரியம்மாளுடன் பேசிக் கொண்டிருந்தார். அதன் பின் திடீரென்று மாயமாகி விட்டார். இது குறித்து மாரியம்மாளும்,கஸ்தூரியின் கணவர் ஐயப்பனும் தனித்தனியாக ஸ்ரீவைகுண்டம் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து, கஸ்தூரியை தேடி வந்தனர். கடந்த 10 நாள்களாக இவரை தேடியும் துப்பு கிடைக்கவில்லை. இதனால் கஸ்தூரி கடத்தப்பட்டு இருப்பாரோ என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.