போலீஸாரை கிறுகிறுக்க வைக்கும் 'தில்லாலங்கடி' மோகனாம்பாள்...!
வேலூர்: போலீஸாருக்கு நன்றாகவே தண்ணீர் காட்டி வருகிறார் கரகாட்டக் கலைஞரான மோகனாம்பாள். இவரது வீட்டில்தான் சமீபத்தில் கோடி கோடியாக பணம், நகைகளைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் தலைமறைவாகி விட்ட மோகனாம்பாளைப் பிடிக்க வேலூர் போலீஸார் கடுமையாக போராடி வருகின்றனர்.
வேலூர் வசந்தபுரம் இந்திரா நகரை சேர்ந்த மோகனாம்பாளின் காட்பாடி வீட்டில் ரூ. 4 கோடி பணம் மற்றும் 73 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மோகனாம்பாள், அவரது அக்கா நிர்மலா, அவரது மகன் சரவணன் மற்றும் உறவினர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
சரவணனின் மனைவி தேவிபாலா, மோகனாம்பாளின் அக்கா நிர்மலாவின் மூத்த மகன் பழனி(40) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மோகனாம்பாளுக்கு உதவியதாக அணைக்கட்டு பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் பாபுவையும் போலீசார் கைது செய்தனர்.
அதேசமயம், மோகனாம்பாள் மற்றும் 2 பேர் இதுவரை சிக்கவில்லை. இவர்களுக்கு செம்மரக் கடத்தலில் தொடர்பு இருப்பதும் அம்பலமாகியுள்ளது. இவர்களைப் பிடிக்க போலீஸார் கடுமையாக போராடி வருகின்றனர்.
3 பேரும் இருப்பிடத்தை மாற்றி மாற்றி போலீஸாருக்கு போக்கு காட்டுவதாக கூறப்படுகிறது. மேலும் முன்ஜாமீனுக்கும் முயன்று வருகிறார்களாம்.
ஒவ்வொரு நாளும் இவர்கள் தங்களுடைய இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருக்கின்றனர். பணம் பறிமுதல் செய்யப்பட்ட மறுநாள் மட்டும் தங்களுக்கு வேண்டியவர்களிடம் செல்போனில் பேசியுள்ளனர்.
அப்போது அவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து பேசியது தெரியவந்தது. அதன் பிறகு அவர்கள் எந்த செல்போன் நம்பரில் உள்ளனர் என்பது மர்மமாகி விட்டது.
இருந்தாலும் அவர்கள் பதுங்கியிருந்து கோர்ட்டில் முன்ஜாமீன் பெற முயற்சித்து வருவது போலீசுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் எந்த கோர்ட்டில் சரணடைந்து விடாமலும், முன்ஜாமீன் பெறாமலும் தடுக்க வேண்டிய முயற்சிகளில் தனிப்படை போலீசார் இறங்கியுள்ளனர்.
இதற்காக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் கோர்ட்டுகளில் இந்த கும்பல் சரணடையாமல் தடுக்க வசதியாக அம்மாநில போலீசாருக்கும் தகவல் அளித்தனர். அவர்கள் அங்கு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.