அமில வீச்சில் உயிரிழந்த காரைக்கால் வினோதினியின் தாயார் தற்கொலை
தீபாவளிப் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடிவிட்டு சென்னை திரும்புவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ஆம் தேதி இரவு பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்த காரைக்காலைச் சேர்ந்த வினோதினி மீது சுரேஷ் என்பவர் ஆசிட் வீசினார்.
இந்த சம்பவம் நடந்ததற்கு அடுத்த நாள் சுரேஷ் கைது செய்யப்பட்டார். அதே தினத்தில் மேல் சிகிச்சைக்காக வினோதினி சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர் விசாரணைகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 167 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் பிப்ரவரி 12-ஆம் தேதி வினோதினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வினோதினியின் தாயார் சரஸ்வதி நேற்று நள்ளிரவு திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். வினோதினி தாக்குதலின்போதே சரஸ்வதி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டவர்தான்.
சீர்காழி அருகே திருக்கடையூரில் தனது கணவருடன் வசித்து வந்தார் சரஸ்வதி. நேற்று கணவன், மனைவிக்கு இடையே ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சரஸ்வதி விஷம் குடித்து விட்டார்.
உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகி்ச்சை பலனளிக்காமல் சரஸ்வதி நேற்று நள்ளிரவில் உயிரிழந்தார்.