அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.. காரைக்குடி நகரத்தார் சங்கம்
அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என காரைக்குடி நகரத்தார் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சென்னை: அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என காரைக்குடி நகரத்தார் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ ரஜினியால் ஆட்சியை பிடிக்க முடியாது வேண்டுமானால் காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம் என தெரிவித்தார்.
இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் காரைக்குடி நகரத்தார் சங்கத்தினர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது, ரஜினி பற்றிய அரசியல் விமர்சனத்தில் ரஜினி தமிழக ஆட்சியை பிடிக்க முடியாது காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம் என்று அமைச்சர் சொல்லியிருப்பது புண்படுத்துகிற பேச்சாகும்.
இதற்காக அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஆச்சி என்பது நகரத்தார் சமூகத்தில் மணமான பெண்களை குறிக்கின்ற மரியாதைக்குரிய சொல், அவர்களை யார் மேண்டுமானாலும் பிடிக்கலாம் என்று அமைச்சர் கூறியுள்ள நாராசமான வார்த்தைகளை கேட்கிற பொழுது எங்கள் நெஞ்சம் கொதிக்கிறது.
அமைச்சர் தனது பேச்சை திருத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு காரைக்குடி நகரத்தார் சங்கத்தினர் தெரிவித்தனர்.
நமது வாசகர் அன்புடன் லேனாவின் கருத்து
இப்பிரச்சனை தொடர்பாக நமது வாசகர் கொத்தமங்கலம் அன்புடன் லேனா நமக்கு அனுப்பியதாவது: சமீபத்தில் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு என்பவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் நகரத்தார் சமூகப் பெண்களைப்பற்றி தவறான எண்ணக் கருத்தை பதிவு செய்துள்ளார். அது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அமைச்சரின் கருத்து நகரத்தார் சமூகத்தினரை மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. அவர் அதே ஊடகங்களின் வாயிலாக நகரத்தார்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். அமைச்சரின் பேச்சைக் கண்டித்து இன்று காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அமைச்சர் மன்னிப்பு கோராவிட்டால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ் நாட்டில் எத்தனையோ கிராமங்களில் இன்றளவும் சாலை, மின்சாரம், குடிநீர் மற்றும் போக்குவரத்துக்கு போன்ற அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யபடாமல் இருக்கும் வேளையில் அமைச்சர்கள் ஊடகங்களுக்கு வெட்டியாக பேட்டி கொடுப்பதை நிறுத்திவிட்டு ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ஓட்டுபோட்ட அப்பாவிகளின் கோரிக்கை.