கரகாட்ட மோகனாவிடம் பறிமுதல் செய்த ரூ.4 கோடி நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் மோகனாம்பாள் (50). கரகாட்ட கலைஞர். இவருடன் தொழில் ரீதியான பழக்கம் உள்ள கரகாட்ட கலைஞர் ஜமுனா (55). காட்பாடி தாராபடவேடு கோவிந்தராஜி முதலி தெருவில் ஜமுனாவுக்கு சொந்த வீடு உள்ளது. இந்த வீட்டில் கடந்த இரண்டரை மாதங்களாக மோகனாம்பாள் வாடகைக்கு வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு இரவு நேரங்களில் சந்தேக நபர்கள் அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், கடந்த மே மாதம் மோகனாம்பாள் வீட்டில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் வீட்டின் உள்ளே டைனிங் டேபிளுக்கு அடியில் இருந்த சாக்கு மூட்டை, அட்டைப் பெட்டியை பிரித்துப் பார்த்தபோது, அதில் கட்டுக் கட்டாக 1000, 500, 100 ரூபாய் நோட்டுகள் இருந்தன. ஒரு பிளாஸ்டிக் கவரில் தங்க நகைகள் இருந்தது.
இதனையடுத்து அங்கிருந்த ரூ.4 கோடியே 17 லட்சம் ரொக்கப் பணம், 73 பவுன் நகை மற்றும் வீட்டு அடமான பத்திரங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் செம்மர கடத்தல் சம்பவங்களில் சம்பாதித்தது என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பான விசாரணையில், செம்மர கடத்தல் புள்ளிகளான மோகனாம்பாளின் உறவினர் சரவணன், திமுக ஒன்றிய செயலாளர் பாபு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான மோகனாம்பாள் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்த நிலையில் மோகனாம்பாள் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் காட்பாடி நீதிபதி சுஜாதா முன்னிலையில் நேற்று ஒப்படைக்கப்பட்டது. நீதிபதி உத்தரவின் பேரில் பணம் காட்பாடி இந்தியன் வங்கியில் செலுத்தப்பட்டது.