ஒரு கூண்டில் நாய்.. மற்றொரு கூண்டில் ஆடு.. சிக்குமா சிறுத்தை? பீதியில் காரமடை மக்கள்
தப்பி சென்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.
காரமடை: சிக்காமல் போக்கு காட்டி வரும் சிறுத்தையை இந்த முறை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று வனத்துறையினர் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஒருபுறம் நாயையும், மற்றொரு புறம் ஆட்டையும் கூண்டுகளில் வைத்து கண்காணித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் வனத்தை ஒட்டியுள்ள மலையடிவார கிராமங்களில் கடந்த மூன்று மாத காலமாக சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதாக வனத்துறையிடம் ஊர் மக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
30 ஆடுகள் மர்ம உயிரிழப்பு
காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீளியூர், பனப்பாளையம், மேடூர், வெள்ளியங்காடு, கணுவாப்பாளையம், முத்துக்கல்லூர், கெம்மாரம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த மூன்று மாதகாலத்தில் மட்டும் முப்பதிற்கும் மேற்பட்ட ஆடுகள் மர்மமான முறையில் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தன. இவையனைத்தும் விவசாய தோட்டங்களில் உள்ள பட்டிகளில் கட்டி வைக்கபட்டிருந்த ஆடுகளாகும். தோட்டக்காவலுக்கு உள்ள நாய்களும் இதே போல் கொல்லப்பட்டு கிடந்தன. இரவு நேரங்களில் ஊருக்குள் நுழையும் சிறுத்தைகள் தான் இந்த இறப்புகளுக்கு காரணம் என்றும், உடனடியாக கால்நடைகளை கொல்லும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி கிராமமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.
ஆட்டை கொன்று ஓடியது
இதனையடுத்து மூர்த்தி என்பவர் தோட்டத்தில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க திட்டமிட்டு கூண்டு அமைத்தனர். மேலும் சிறுத்தையை ஈர்க்க அந்த கூண்டுக்குள் ஒரு ஆட்டையும் கட்டி வைத்தனர். ஆடு சாப்பிட வரும்போது பிடித்துவிடலாம் என கணக்கு போட்டனர். ஆனால் அன்று இரவே கூண்டுக்குள் தேடப்பட்டு வந்த சிறுத்தை சிக்கியது.. எதிர்பார்த்தபடியே அங்கிருந்த ஆட்டையும் கொன்றது.. ஆனால் கூண்டின் அடிப்புறத்தை பிளந்துகொண்டு, ஓட்டை வழியாக சிறுத்தை ஓடி தப்பியது. வனத்துறையினர் ஒன்று நினைக்க, சிறுத்தையின் செயல் வேறு மாதிரி இருந்தது.
புதிய 2 கூண்டுகள்
சிறுத்தையை பிடிக்க வைக்க பட்ட கூண்டை இது வரை எந்த ஒரு சிறுத்தையும் உடைத்ததில்லை. அத்துடன் முதன்முறையாக இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருப்பதால் வன துறையினர் அதிர்ச்சியடைந்தனர். எனவே அதே இடத்தில் இரு கதவுகள் கொண்ட புதிய வகை கூண்டை அமைத்தனர். இந்த முறையாவது சிறுத்தையை பிடித்துவிட வேண்டும் என்று, ஒரு கூண்டில் ஆட்டையும், மற்றொரு கூண்டில் நாயையும் கட்டி வைத்துள்ளனர். கூண்டுகளை சுற்றி மரக்கிளையும், சருகுகளையும் சுற்றிலும் கொட்டி வைத்துள்ளனர்.
சிக்குமா சிறுத்தை?
இதுபோதாமல், 8 பேர் கொண்ட வனத்துறை சிறப்புக்குழுவினர் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது, சிறுத்தையை பிடித்து விடுவோம், பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என நம்பிக்கையும் தெரிவித்து வருகின்றனர். இவ்வளவு நாள் வனத்துறையினரை போக்கு காட்டி வரும் சிறுத்தை எப்போது ஊருக்குள் வரும்? கூண்டில் எப்போது பிடிபடும் என காரமடை மக்களும், வனத்துறையினரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சிக்குமா சிறுத்தை?