சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக கரன்சின்ஹா நியமனம்
சென்னை மாநகர காவல்துறையின் புதிய ஆணையராக கரன்சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆணையராக கரன்சின்ஹாவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு காலியாக உள்ள ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதிக்கு ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த 9ம் தேதி பிறப்பித்தது. அறிவிப்பு செய்த அன்றே நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை போலீஸ் கமிஷனர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார். எனவே அவரை போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்து உடனடியாக மாற்ற வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் செய்தது. எதிர்கட்சியினர் பலரும் புகார் அளித்தனர்.
இந்தப் புகார் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது. புதிய காவல்துறை ஆணையரை நியமிப்பதற்காக 3 போலீஸ் அதிகாரிகளின் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது.
தற்போது ஏடிஜிபிக்களாக உள்ள கரன்சின்ஹா(சிபிசிஐடி), அசுதோஷ் சுக்லா(மதுவிலக்கு), திரிபாதி(சட்டம் ஓழுங்கு) ஆகியோரது பெயர்களை அனுப்பினார் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனுப்பினார். அதில் திரிபாதி கடந்த பொதுத் தேர்தலின்போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவரது பெயரை தேர்தல் ஆணையம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.
அசுதோஷ் சுக்லா, கரன்சின்கா ஆகியோரில் யாரை நியமிப்பது என்று ஆலோசனை நடத்தினர். அசுதோஷ் சுக்லா கடந்த பொதுத் தேர்தலின்போது ஜார்ஜ் மாற்றப்பட்ட பிறகு, காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டவர். இருந்தாலும் இந்த முறை கரன்சின்ஹாவை சென்னை மாநகர காவல்துறை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர், உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு அனுப்பினார். இதனையடுத்து காவல்துறை ஆணையர் ஜார்ஜை மாற்றிவிட்டு, கரன்சின்ஹாவை நியமிப்பதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளனர்.