மீண்டும் 'கராத்தே' தியாகராஜன்- தென்சென்னை காங். மாவட்ட தலைவரானார்!
தமிழக காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகளாக மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்படாமல் இருந்தனர். அண்மையில் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்த பட்டியலில் மத்திய அமைச்சர் வாசனின் கையே ஓங்கி இருந்தது. அவரது ஆதரவாளர்கள் 25 பேர் மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். இதேபோல் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் 8 பேரும், முன்னாள் தலைவர் தங்கபாலு ஆதரவு தலைவர்கள் 9 பேரும் மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தங்கபாலு ஆதரவாளரான தென் சென்னை மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்ட வெங்கட் அதிரடியாக மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரும், முன்னாள் சென்னை மாநகராட்சி துணை மேயருமான கராத்தே தியாகராஜன் தென் சென்னை மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் மேலும் 3 மாவட்ட தலைவர்களாக ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2011 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போட்டி வேட்பாளரை களம் இறக்கியதால், கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.