பெண்களும் தண்ணி அடிக்கலாம்னு சொல்ற குஷ்புவுக்கு அகில இந்திய காங். பதவியா? 'கராத்தே' காட்டம்
சென்னை; பெண்களும் மது குடிக்கலாம் என்று சொல்கிற நடிகை குஷ்புவுக்கு அகில இந்திய காங்கிரஸ் பதவி தருவதா? என போர்க்கொடி தூக்கியுள்ளார் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர்களாக தமிழகத்தைச் சேர்ந்த 122 பேர் அண்மையில் நியமிக்கப்பட்டனர். இவர்களில் சென்னையைச் சேர்ந்த 13 பேருக்கும் இடம் அளிக்கப்பட்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் தொண்டர்கள், பிரமுகர்களைவிட்டு விட்டு யார் யாருக்கோ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது கராத்தே தியாகராஜனின் குற்றச்சாட்டு. இது தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களள சந்தித்தார் கராத்தே தியாகராஜன்.
அப்போது, திருச்சி வேலுச்சாமி, மூத்த வழக்கறிஞர் காந்தி, உ. பலராமன் உள்ளிட்ட ஏராளமான மூத்த நிர்வாகிகளைவிட்டுவிட்டு அமெரிக்கை நாராயணன் போன்றவர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கொள்கை பிடிப்போடு செயல்படுகிறவர்களை கழுத்தை பிடித்து கட்சியை பிடித்து தள்ளும் வேலையை செய்ய வேண்டாம் என்றும் கராத்தே தியாகராஜன் கேட்டுக் கொண்டார்.
பின்னர் தனது ஆதரவாளர்களுடன் சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களைக் கண்டித்து முழக்கமிட்டார் கராத்தே தியாகராஜன்.