வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகிறார் கர்நாடக அம்மா அணி செயலாளர் புகழேந்தி
கர்நாடக அம்மா அணி செயலாளர் புகழேந்தி இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகிறார்
சென்னை : வருமான வரித்துறையினரின் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, கர்நாடக அதிமுக அம்மா அணி செயலாளர் புகழேந்தி இன்று சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக இருக்கிறார் .
சசிகலா மற்றும் தினகரனின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என பலரிடமும் கடந்த வியாழக்கிழமை வருமான வரித்துறை சோதனையில் இறங்கியது. மொத்தம் 180க்கும் அதிகமான இடங்களில் நடந்த சோதனையில் 1800க்கும் அதிகமான அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் ஜெயா டிவி அலுவலகம், ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் மதுபான ஆலை என பல இடங்களில் நடந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன. இன்றும் ஜெயா டிவி, விவேக் ஜெயராமன் வீடு என சில இடங்களில் ஐந்தாவது நாளாக சோதனை நடந்து கொண்டு இருக்கிறது.
தமிழகம் மட்டுமின்றி சசிகலா குடும்பத்தினரின் சொத்துகள் இருக்கும் சில தென் மாநிலங்களிலும் சோதனை நடந்தது. அதில் கர்நாடக அதிமுக அம்மா அணி செயலாளர் புகழேந்தியின் வீடும் அடக்கம். பெங்களூருவில் இருக்கும் வீடு, அலுவலகம் என புகழேந்திக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது.
இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரிக்க நேரில் ஆஜராகுமாறு புகழேந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 11.30 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க இருக்கிறார் புகழேந்தி. மேலும் பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.