கொதிக்கும் காவிரி: தமிழக எல்லையில் கர்நாடக பேருந்துகள் தடுத்து நிறுத்தம்.. சோதனை சாவடி வெறிச்
போராட்டம் காரணமாக தமிழக எல்லையில் கர்நாடக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
Recommended Video
சத்தியமங்கலம்: காவிரி போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழக எல்லையில் கர்நாடக பேருந்துகளை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதன் காரணமாக சோதனை சாவடிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தும் கூட அதை திரித்து குழப்பிக் கொண்டிருக்கிறது. இதனைக் கண்டித்தும், வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் பல கட்ட போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தமிழக கர்நாடக எல்லையில் கர்நாடக பதிவெண் கொண்ட பேருந்துகள் அனைத்தும் சோதனை சாவடிகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
சத்தியமங்கலம் வழியாக கோவை, ஈரோட்டிற்கு செல்லும் கர்நாடக அரசு பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. திம்பம் சோதனை சாவடியில் போலீசாரால் இந்த பேருந்துகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
எந்தவித பிரச்சினையும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸார் கருதியே வாகனங்களை தடுத்து நிறுத்தியதாகவும், அதனால் புளிஞ்சூர் சோதனைசாவடி வழியாக கர்நாடக பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. எல்லையோர பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.