கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? 3 கருத்துக் கணிப்புகள் சொல்வது என்ன?
Recommended Video
சென்னை: கர்நாடகாவில் 1985ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும், பதவியில் இருக்கும் கட்சியே மீண்டும் ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மே 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இங்கு சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
காற்று மாறுகிறது
1985ம் ஆண்டு ராமகிருஷ்ண ஹெக்டே ஆட்சி காலத்திற்கு பிறகு கர்நாடகாவில், தொடர்ந்து மீண்டும் அதே முதல்வர் தலைமையிலான அரசை மக்கள் தேர்ந்தெடுத்தது கிடையாது. ஆட்சிக்கு எதிரான நிலைப்பாட்டையே ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் எடுத்துள்ளனர். ஆனால், இம்முறை காற்று மாற்றி வீசுகிறது. காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று சி-ஃபோர் அமைப்பு நடத்திய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
காங்கிரஸ் வெற்றி
2013ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் அதிகபட்சம் 120 சீட்டுகளை வெல்லும் என இதே அமைப்பு கணித்தது. அத்தேர்தலில் காங்கிரஸ் 122 தொகுதிகளை வென்று, தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைத்தது. இம்முறை, காங்கிரஸ் 124 சீட்டுகளை வெல்லும் என இதே அமைப்பு கருத்துக் கணிப்பில் கூறியுள்ளது. எனவே மீண்டும் ஆட்சியை பிடித்து வரலாற்றை மாற்றியமைக்கலாம் என்ற சந்தோஷத்தில் உள்ளனர் காங்கிரஸ் கட்சியினர்.
இரு கருத்துக் கணிப்புகள்
ஆனால், மேலும் இரு கருத்துக் கணிப்புகளோ, தொங்கு சட்டசபை அமையும் என கூறுகின்றன. மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிதான், எந்த கட்சி ஆட்சியமைக்க வேண்டுமானாலும், கை கொடுக்க வேண்டிய கட்சியாக மாறும் எனவும் அவை கூறுகின்றன. சிஹெச்எஸ் நடத்திய கருத்து கணிப்பில், காங்கிரஸ் 77-81 சீட்டுகளை பிடிக்கும் எனவும், பாஜக 73-76 சீட்டுகளை கைப்பற்றும் எனவும் கணித்துள்ளது. மதசார்பற்ற ஜனதாதளம் 64-66 தொகுதிகளை கைப்பற்றும் என கூறுகிறது இந்த கருத்துக் கணிப்பு. பலமிழந்துள்ள, ம.ஜ.த கட்சி இவ்வளவு அதிக சீட்டுகளை வெல்ல முடியாது என்பது சாமானியர்களும் பேசிக்கொள்ளும் கணிப்பு. அப்படியிருக்க இந்த அமைப்பு எப்படி இவ்வளவு இடங்களை அக்கட்சிக்கு கொடுத்தது என்பது புரியாத புதிர்.
மதசார்பற்ற ஜனதாதளம் முக்கிய பங்கு
மற்றொரு கருத்துக்கணிப்பை டிவி9 மற்றும் சிவோட்டர் ஆகியவை இணைந்து நடத்தியுள்ளன. இது ஓரளவுக்கு கள நிலவரத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. இந்த கருத்து கணிப்புபடி, காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவாகும் என்றாலும், அறுதி பெரும்பான்மையை பெற முடியாது. அக்கட்சி 102 சீட்டுகள் வரையிலும், பாஜக 92 சீட்டுகள் வரையிலும், ம.ஜ.த 25 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளது என்கிறது இந்த கருத்துக் கணிப்பு.