வஜூபாய் வாலா கர்நாடக ஆளுநரா ? பாஜகவின் ஏஜெண்டா ? வைகோ டவுட்!
கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா பாஜக அரசின் ஏஜெண்ட் போல செயல்படுகிறார் என்று வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
Recommended Video
நாங்குநேரி : கர்நாடக மாநிலத்தின் ஆளுநரான வஜூபாய் வாலா பாஜக அரசின் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார். அவரால் நாட்டின் அரசியலமைப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுகவின் வெள்ளி விழாவை முன்னிட்டு நாங்குநேரியில் கட்சிக்கொடி ஏற்றும் விழா இன்று நடந்தது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார்.
அப்போது பத்திரிகையாளர்களிடம் அவர் பேசுகையில், கர்நாடகாவில் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆளுநர் பாஜகவை ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார். இது திட்டமிட்ட ஜனநாயகப் படுகொலை.
கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா பாஜகவின் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார். அவரால், அம்மாநிலத்தில் குதிரை பேர ஆட்சிக்கு வழிவகுக்கப்பட்டு, நாட்டின் அரசியலைமைப்புச் சட்டம் கேள்விக்குறியாகியுள்ளது.
மத்திய அரசும் தமிழகத்திற்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இறுதி வரை காவிரி பிரச்னையில் மேலாண்மை வாரியம் அமைக்காமல், நினைத்ததை சாதித்துவிட்டார்கள் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.