கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்திருப்பது ஜனநாயகப் படுகொலைக்கு சமம்: திருமாவளவன்
கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்திருப்பது ஜனநாயகப் படுகொலைக்குச் சமம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை : கர்நாடகாவில் பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா ஆட்சி அமைத்து இருப்பது, ஜனநாயகப் படுகொலைக்குச் சமம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்திருப்பது ஜனநாயகப் படுகொலைச்செயல் ஆகும்.
கர்நாடக தேர்தல் முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மையான இடங்கள் கிடைக்காத நிலையில், அம்மாநில ஆளுநர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தது ஒருதலைபட்சமான முடிவு.
மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்த நிலையில், அவர்களுக்கான ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டு இருக்கிறது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கிலும் எடியூரப்பா பதவியேற்பதில் தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பதும் அதிர்ச்சியாக இருக்கிறது. மணிப்பூர், கோவா, மேகாலயா மாநிலங்களின் தேர்தல் முடிவுகளிலும் பாஜக இதேபோல் நடந்து கொண்டது.
ஆளுநர்களை தங்களது கைப்பாவைகளாக மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய சக்திகள் அனைவரும் ஒன்று திரள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில் பாஜக கலாச்சார பாசிசத்தை தட்டி எழுப்பி வருகிறது. இது அரசியல் கொடுங்கோன்மைக்கு வழி வகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.