கர்நாடக தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சர்
சென்னை: கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவது சரியானது அல்ல. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.
மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, திருச்சியில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் இந்திய மக்கள்தான். இதில் ஜாதி பெயரால் பிரச்சினை எதற்கு? சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றால் கலப்பு திருமணங்கள்தான் தீர்வாக அமையும். ஜாதி பிரச்சினைகளை தூண்டுபவர்கள் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம்தான் உத்தரவிட்டது. இதை ஏற்க விருப்பம் இல்லை என்றால் போராட்டம் நடத்த கர்நாடக மக்களுக்கு உரிமை உள்ளது. அதற்காக கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவது சரி அல்ல. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.