ஜெ. தீர்ப்பை எதிர்ப்பு அப்பீல் செய்ய கர்நாடகம் முடிவு: ஆச்சார்யாவிற்கு சட்டத்துறை செயலாளர் கடிதம்
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசனை வழங்குமாறு அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு, கர்நாடக சட்டத்துறை செயலர் சங்கப்பா கடிதம் எழுதியுள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி கடந்த 11ஆம் தேதி தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பில் பிழை இருப்பதாகவும், தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய கர்நாடக மாநில முதல்வர் சித்தராமைய்யா, 'ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக, நாங்களே சரியான சட்ட முடிவு எடுப்போம். அதில், தி.மு.க., அல்லது அ.தி.மு.க.,வின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கப் போவதில்லை,'' என கூறியிருந்தார்.
உயர் நீதிமன்றம் தீர்ப்பு குறித்து, அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, சட்ட அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி, தீர்ப்பை படித்து பார்த்த பிறகு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதா, வேண்டாமா என்பது குறித்து முடிவெடுப்போம் என்றும் சித்தராமைய்யா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கர்நாடக உயர்நீதின்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் விவகாரம் தொடர்பாக தகுந்த ஆலோசனை வழங்குமாறு ஆச்சார்யாவுக்கு சட்டத்துறை செயலர் சங்கப்பா கடிதம் எழுதியுள்ளார். இந்த ஆலோசனைக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.