ஆர்ப்பரிக்கும் காவிரி.. 119 அடியைத் தொட்டது மேட்டூர் அணை நீர்மட்டம்.. பெரும் குஷியில் விவசாயிகள்!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117அடியை தாண்டியுள்ளது.
சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை எட்டியுள்ளது. இன்று இரவே அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணை நிரம்புவதையொ ட்டி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 120 அடியாகும். இன்னும் சில மணி நேரங்களிலேயே இந்த அளவை அது எட்டும் எனத் தெரிகிறது.
கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் 67,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் கபினி அணை நிறைந்தது. அதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையும் நிரம்பியது.
தற்போது அங்கு மீண்டும் பெரிய அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து இருக்கிறது. வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரித்து இருக்கிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரவு 7 மணி வாக்கில் 119 அடியை தொட்டதாக அறிவிக்கப்பட்டது. அணையிலிருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இது இன்று இரவு மேலும் அதிகரித்து விநாடிக்கு 30,000 கன அடி நீராக அதிகரிக்கப்படவுள்ளது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியாகிறது. இதனால் இன்று கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.
அமை நிரம்புவதைத் தொடர்ந்து விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஆடிப் பெருக்கையொட்டி அணை திறக்கப்பட்டு காவிரியில் தண்ணீர் ஓடுவதால் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.