அண்ணா பல்கலை. துணை வேந்தராக கர்நாடகாவின் சூரப்பா நியமனம்? பேராசிரியர்கள் கொந்தளிப்பு
அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தராக கர்நாடகாவின் சூரப்பா நியமிக்கப்படலாம் என தகவல்.
சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக கர்நாடகாவின் சூரப்பாவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமிக்க உள்ளதாக வெளியான தகவல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பல்கலைக் கழகங்களில் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை மட்டும் நியமிக்கும் போக்கு தொடருகிறது. இசைப் பல்கலைக் கழகத்துக்கு கேரளாவின் பிரமீளா குருமூர்த்தி, சட்டப் பல்கலைக் கழகத்துக்கு ஆந்திராவின் சாஸ்திரி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதைப்பற்றி ஆளுநர் பன்வாரிலால் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துக்கும் கர்நாடகாவின் சூரப்பாவை ஆளுநர் நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது பேராசிரியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் காவிரி பிரச்சனையில் தமிழகம் பெரும் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் கர்நாடகாவின் சூரப்பாவை ஆளுநர் நியமிக்க இருப்பதாக கூறப்படுவது வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சுவதாக உள்ளது.
பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் சூரப்பா. தமிழகத்தின் பல்கலைக் கழகங்களுக்கு தகுதியான துணைவேந்தர்கள் தமிழகத்தில் இல்லையா? இது தமிழர்களை அப்பட்டமாக அவமதிக்கும் செயல் என்பதுதான் மக்களின் குற்றச்சாட்டு.