கவர்ச்சி தேவி சன்னிக்கு வந்த வீரமாதேவி சோதனை!
வீரமாதேவி படத்தில் நடிக்க சன்னிலியோனுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
சென்னை: 'வீரமாதேவி' படத்தில் சன்னி லியோன் நடிக்க கன்னட ரக்சன வேதிகே அமைப்பினர் உள்ளிட்ட ஏராளமானோரின் எதிர்ப்பு கூடிக் கொண்டே போகிறது.
வீரமாதேவி என்பது சரித்திர படம். தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளிவர உள்ளது. இந்த படத்தில்தான் சன்னிலியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ஒரு கவர்ச்சி நடிகைக்கு சரித்திர படத்தில் என்ன வேலை என்ற கேள்விகள் தற்போது முணுமுணுக்க ஆரம்பித்துள்ளன.
பாசமலர்
"பாசமலர்" திரைப்படத்தில் சிவாஜிகணேசனும் - சாவித்ரியும் சகோதர பாசத்தை கொட்டி நடித்திருப்பார்கள். அதுமுதல் ரசிகர்களும் இவர்கள் இருவரையும் சொந்த அண்ணன் தங்கையாகவே பாவிக்க துவங்கி விட்டார்கள். பாசமலருக்கு பிறகு இவர்கள் நடித்த ப்ராப்தம், எல்லாம் உனக்காக போன்ற படங்கள் படுதோல்வி அடைந்ததற்கு காரணம் ரசிகர்கள் சிவாஜியையும், சாவித்ரியையும் கணவன்-மனைவியாகவோ, காதலர்களாகவோ பார்க்க தயாராக இல்லை என்பதுதான்.
எம்ஜிஆரின் ரிக்ஷாக்காரன்
இதேதான் எம்ஜிஆரும்!! திரையில் மட்டுமல்லாமல் திரைக்கு வெளியேயும் ஹீரோவாகவே அவர் இறுதி வரை வலம் வரவும் மக்கள் ஏற்றுக் கொள்ளவும் காரணம் அவரது கதாபாத்திரங்கள்தான். திரையில் தோன்றிய அவரது நிழல் வடிவங்கள் மக்களிடமும் பிரதிபலித்தது. அழுக்கும் கிழிசலும் கொண்ட கந்தலாடையுடன் ரிக்ஷா இழுத்தவர்கள் எம்ஜிஆரின் "ரிக்ஷாகாரன்" படம் பார்த்து முக்கால் பேண்ட்டையும் சட்டையையும் அணிந்து கொண்டார்கள்.
சீதையான தீபிகா
இப்படித்தான் "ராமாயணம்" என்ற தொடர் தூர்தர்ஷனில் வெளியாகி நாட்டு மக்களின் அமோக வரவேற்பை பெற்றது. "இராமாயணம் தொடரானது இலட்சக்கணக்கான பார்வையாளர்களின் கற்பனைகளைத் தூண்டியுள்ளது" என அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியே சொன்னார். ஒவ்வொரு கிராமங்களிலும் பொதுமக்கள் டிவி இருக்கும் வீடுகளில் சூழ்ந்து கொள்வார்கள். அதற்கு முக்கிய காரணம் அதில் நடித்த சீதா-ராமர் கதாபாத்திரங்கள்தான். இதில் தீபிகா என்பவர் சீதையாக நடித்திருந்தார்.
மக்களின் கோஷங்கள்
இதனால் நாட்டு மக்கள் குறிப்பாக வடமாநிலங்களில் தீபிகாவை சீதையாகவே தங்கள் மனங்களில் வடித்துவிட்டார்கள். அதனால் பொது இடங்களில் அவரை பார்க்கும்போது கையெடுத்து கும்பிடவும், காலில் விழவும்கூட செய்தார்கள். ஆனால் இதே தீபிகா ஜீன்ஸ் அணிந்து ஒரு நிகழ்ச்சிக்கு சென்றபோது, அதனை மக்களால் தாங்கவே முடியவில்லை. கோஷம் எழுப்பினார்கள், செருப்புகளை எடுத்து வீசி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் சீதை என்றால் இப்படித்தான் இருப்பார் என்று தீபிகாவை உருவாக்கி வைத்ததே அதற்கு காரணம்.
தூக்கி பிடிக்கும் நியதி
அதேநிலைதான் இன்று சன்னி லியோனுக்கு ஏற்பட்டுள்ளது. பொதுவாக, கவர்ச்சியாகவே பார்த்துவிட்ட மக்களுக்கு திடீரென குடும்ப பாங்கான வேடத்தில் நடித்தால் ரசிகர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். ஆனால் சன்னி லியோன் விவகாரம் குடும்ப பாங்கு என்பதையும் தாண்டி வரலாற்று சம்பவங்களுடன் தொடர்புடையதாக இருக்கிறது. பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, போன்றவை சினிமாவே என்றாலும், வெறும் கதாபாத்திரங்கள் என்றாலும் அவற்றிற்கும் ஒரு நியதியையும், கருத்தியலையும் மக்கள் தூக்கி பிடிக்கிறார்கள். சரித்திர படத்தில் ஆபாச நடிகையா என பொங்கி எழ ஆரம்பித்துள்ளனர்.
பெரியார் பிறந்த திருச்சி
அதற்காக சரித்திர படத்தில் நடித்தவர்கள் எல்லாம் விவரமானவர்களாகவும், கலாச்சாரத்தை பிரதிபலிப்பவர்களாகவும், வரலாறு அறிந்தவர்களாகவும் எடுத்து கொள்ள முடியாது. "பாரதி" படம் எடுக்கப்பட்டபோது, அதில் மனைவி செல்லம்மா கேரக்டரில் நடித்த தேவயானி கேட்டாராம், "WHO IS BHARATHI" என்று. இப்படித்தான் "பெரியார்" படத்தில் மணியம்மையாக நடித்த குஷ்பு, அதன்பிறகு திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, "பெரியார் பிறந்த மண் இந்த திருச்சி" என்றார். இதற்கு காரணம் இவர்கள் யாரும் நம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதுதான்.
கலாச்சாரம்-பண்பாடு
ஐயப்பன் உள்ளிட்ட சாமி படங்களில் நடிக்கும்போது நிறைய நடிகர், நடிகைகள் உண்மையிலேயே விரதத்துடன் நடித்திருக்கிறார்கள்.
ஆனால் இது கலாச்சாரத்தை வலியுறுத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படமாக கருதப்படுகிறது. திரையில் என்னவாக ஒருவரை பார்க்கிறோமோ, என்ன கதாபாத்திரமாக அவர் அறியப்படுகிறாரோ அப்படியே கடைசி வரை பதிந்துவிடுவது இயற்கை.
கன்னட அமைப்புகள்
இது ஒரு நடிப்பு என்று தொழில் ரீதியான காரணம் சொன்னாலும், பண்பாட்டுக் காரணமே மேலோங்கி எழுகிறது. ஒரு கவர்ச்சி நடிகை எப்படி பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கட்டிக் காப்பார் என்ற கேள்வியை தற்போது சன்னிலியோனுக்கு எதிராக கன்னட அமைப்பினர் எழுப்பியுள்ளனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிப்பது, நிஜமாகவே வாழ்ந்து முடித்தவர்களை அவமதிப்பது போல உள்ளதாகவும் அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆபாசமே மூலதனம்
எனவே ஆபாசத்தை மூலதனமாக்கியும் முன்னிறுத்தியும் பெருமளவு மக்களால் அறியப்பட்ட சன்னி லியோனுக்கு எதிர்ப்புகள் கூடி கொண்டே போகிறது. இந்த படத்தில் ஒருவேளை சன்னிலியோன் உறுதியாக நடித்தால், மக்கள் அதை மன்னித்து வெறும் நடிப்பாக மட்டுமே பார்ப்பார்களா? அல்லது சன்னி லியோன் அந்த கதாபாத்திரத்தையே கைவிட்டுவிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.