கர்நாடகம் திறந்துவிட்டும் வராத காவிரி.. கவலையில் டெல்டா விவசாயிகள்
கர்நாடகம் மாநிலம் திறந்துவிட்டும் தமிழகத்திற்கு காவிரி நீர் வந்து சேரவில்லை. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
மேட்டூர்: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறந்தவிடப்பட்ட நீர் தமிழகத்திற்கு இன்னும் வந்து சேரவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட கர்நாடக அணைகளில் இருந்து கடந்த வெள்ளிக் கிழமையன்று தமிழகத்திற்கு 3,300 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.
வழக்கமாக கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் 3 நாட்களில் தமிழகத்தை வந்தடையும். ஆனால் இந்த முறை 5 நாட்கள் ஆகியும் தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கடும் வறட்சி
தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி தற்போது நிலவி வருகிறது. இதனால் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் கர்நாடகம் தண்ணீர் தர மறுத்து வந்தது.
தென்மேற்கு பருவமழை
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை கர்நாடக மாநிலத்தில் தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக குடகு மாவட்டம், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
வெள்ளப் பெருக்கு
இதனால் குடகு மாவட்டத்தில் பாகமண்டலா காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கேஆர்எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
தண்ணீர் திறப்பு
இதனையடுத்து, கேஆர்எஸ் மற்றும் கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அங்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று வரை தமிழகம் வந்து சேரவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கவலை
டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடி கைவிட்ட நிலையில், சம்பா விவசாயத்திற்கு தண்ணீர் வந்து சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கையோடு விவசாயிகள் காத்திருக்கின்றனர். எனினும் பூமி கடும் வறட்சியை கண்டுள்ளதால் நீரை அதிக அளவில் உறிஞ்சி கொள்வதாகவும் அதனால்தான் தாமதமாகிறது என்றும் விஷயம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.