ராம்குமார் பக்கம் திரும்பியது தமிழகம்... காவிரியில் நீர் திறப்பதை நிறுத்தியது கர்நாடகம்!
பெங்களூரு: தமிழகம் முழுவதும் ராம்குமார் மரணச் செய்தி பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில் சத்தம் போடாமல் காவிரியில் தண்ணீர் திறப்பதை நிறுத்தி விட்டது கர்நாடகா.
நீர்மட்டம் குறைந்து விட்டதால் இனியும் நீர் திறக்க முடியாது என்று கர்நாடக தரப்பில் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை உரிய காலத்தில் கர்நாடகா திறக்கவில்லை. இதையடுத்து உச்சநீதிமன்றத்தை நாடியது தமிழக அரசு. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் முதலில் 10 நாட்களுக்கு தினசரி விநாடிக்கு 15,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து கர்நாடகத்தில் போராட்டம் வெடித்தது. இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. இருப்பினும் வேறு வழியில்லாமல் கர்நாடகு அரசு தண்ணீர் திறந்து விட்டது. இருப்பினும் உச்சநீதிமன்றம் கூறிய அளவில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது முந்தைய உத்தரவை மாற்ற வேண்டும் என்ற கர்நாடகாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. மேலும் 20ம் தேதி வரை தினசரி விநாடிக்கு 12,000 கன அடி நீரை திறந்து விடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பெங்களூரில் மிகப் பெரிய கலவரம் வெடித்தது. தமிழர்களின் வாகனங்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டன.
இதற்கிடையே, இன்று மாலை திடீரென கே.ஆர்.எஸ் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தி விட்டது கர்நாடக அரசு. தமிழகத்தின் ஒட்டுமொத்த கவனமும் தற்போது ராம்குமார் விவகாரத்தில் திரும்பியுள்ள நிலையில் கர்நாடகம் தண்ணீர் திறப்பை நிறுத்தியுள்ளது. போதிய அளவில் நீர்மட்டம் இல்லை என்று இதற்குக் காரணம் கூறப்பட்டுள்ளது.